மன்னார் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கீரி எனுமிடத்தில் பனங்கட்டி உட்பட பனம் பொருள் உற்பத்தி தொழிற்சாலையை நடத்தி வரும் சுயதொழில் முயற்சியாளர் கோகுல பாலன், தனது உற்பத்தி விஸ்தரிப்பதற்கு கட்டிட வசதிகள் தேவையாக உள்ளது என்று கூறி புலம்பெயர் தமிழர்களிடம் உதவி கோரியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கும் போது,
மன்னார் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கீரி எனும் இடத்தில் கடந்த 12 வருடங்களாக பனம் பொருள் உற்பத்தியை சொந்தமாக செய்து வருகின்றேன்.
எமது உற்பத்தி நிலையத்தில் என்னுடைய சொந்த முயற்சியால் பனை வெல்லம், பனங்கற்கண்டு, பனங்களி, ஒடியல், ஒடியல் மாவு, போன்றவற்றை சிறிய அளவில் தயாரித்து விற்பனை செய்து வருகின்றேன்.
தமிழர்களின் பாரம்பரிய தொழிலாக இருக்கும் இந்த தொழிலை, விஸ்தரிப்பு செய்ய வேண்டுமாக இருந்தால் கட்டிட வசதிகள் தேவையாக உள்ளது. மேலும் பனை வெல்லம் தயாரிப்பதற்கு தேவையான பதநீரை சேமித்து வைத்தல், பனைவெல்லம் தயாரிப்பதற்கு தேவையான அடுப்புகளை வைப்பதற்கும், மேலும் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை பாதுகாத்து வைப்பதற்கும் இந்த கட்டிட வசதிகள் தேவை.
இந்த தேவைகள் பூர்த்தி செய்யப்படுமாக இருந்தால் எமது பாரம்பரிய தொழில் மறைந்து போகாமல் பாதுகாப்பதோடு இந்த கிராமத்தில் 10 ற்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கமுடியும். மேலும் தரமான பொருட்களை நாங்கள் உற்பத்தி கூடியதாக இருக்கும்.
எமது பொருட்கள் மன்னார் வவுனியா கொழும்பு உட்பட பல இடங்களுக்கு செல்கிறது. இந்த தொழில் மேலும் வளர்ச்சி அடைய வேண்டுமாக இருந்தால் கட்டிட வசதிகள் முக்கியம். எனவே இவ்வாறான செயற்பாடுகள் மற்றும் தொழில் முயற்சிகளுக்கு உதவ புலம்பெயர் உறவுகள் முன்வர வேண்டுமென்றும்” என்றார்.