விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் 17 பேர் சிறையிலிருந்து விடுவிக்கப்படவுள்ளனர்

பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் 17 பேருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க இருப்பதையடுத்து, அவர்கள்  சிறையிலிருந்து விடுவிக்கப்படவுள்ளனர்

நாளை நடைபெறவுள்ள பொசன் பண்டிகையை முன்னிட்டு இந்த பொது மன்னிப்பை ஜனாதிபதி வழங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இவர்கள் 17 பேரும் விடுதலைப் புலிகள் அமைப்பில் பணியாற்றிய குற்றத்திற்காக பல ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வருபவர்களாவர். அவர்கள் அனுபவிக்க வேண்டிய தண்டனைக் காலத்தை விட நீண்ட காலம் அவர்கள் சிறையிலிருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீண்ட காலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விடுதலை புலிகளின் முன்னாள் போராளி சந்தேக நபர்கள் 17 பேரை விடுதலை செய்வதற்கான பரிந்துரை முன்வைக்கப்பட்டு பெயர் பட்டியல் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக் கைதிகள் புனர்வாழ்வளிப்பு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த  தெரிவித்துள்ளார்.

எனினும், ஜனாதிபதியின் தீர்மானம் இதுவரை தமக்கு கிடைக்கவில்லை எனவும் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த குறிப்பிட்டார்.

இதேவேளை, ஜனாதிபதியின் தீர்மானம் நாளை தமக்கு கிடைக்கும் என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.