குறித்த சர்ச்சைக்குரிய காணியில் எந்தவொரு தரப்பும் பிரதேச சபை, பிரதேச செயலகம் ஆகியவற்றின் அனுமதியின்றி எந்தவித கட்டுமான பணிகளையும் செய்ய கூடாது.
அதேவேளை பிரதேச சபை, பிரதேச செயலகம் ஆகியவற்றின் அனுமதியுடன் எந்தவொரு தரப்பும் கட்டுமான பணிகள் செய்ய முடியும்.
இதுவே நீதிமன்ற தீர்ப்பு. இந்த தீர்ப்பில் திருப்தில்லாத விகாரையின் பெளத்த தேரர் அவசியமானால் மேன்முறையீடு செய்யலாம். ஆனால் நீதிமன்ற தீர்ப்பை மீறி இனி கட்டுமான பணிகள் செய்ய முடியாது.
இதை இங்கே எனது அறிவுறுத்தலின் பேரில் வந்திருக்கும் முல்லைத்தீவு பிரதி பொலிஸ் மா அதிபர் மஹிந்த குணரட்ன, பொலிஸ் அத்தியட்சகர் சேனாநாயக்க மற்றும் முல்லைத்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரி கங்கநாத் ஆகியோர் கண்காணிக்க வேண்டும்.
மாவட்ட செயலாளர் சகல தரப்பினருடன் ஸ்தலத்துக்கு நேரடி விஜயம் செய்து அறிக்கை சமர்பிக்க வேண்டும்.
இதுவே இந்த விவகாரம் தொடர்பாக முல்லை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடளின் பின் தனது முடிவாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய ஸ்தலத்துக்கு நேரடி விஜயம் செய்த அமைச்சர் மனோ கணேசன், பின் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இவ்விவகாரம் தொடர்பிலான கூட்டத்தில் கலந்துக் கொண்டார்.
இக்கூட்டத்தில் எம்பிகள் சிவசக்தி ஆனந்தன், சார்லஸ் நிர்மலநாதன், ஸ்ரீதரன், வேலுகுமார், மாவட்ட செயலாளர் ரூபவதி, ஜமமு அமைப்பு செயலாளர் ஜனகன், பிரசார செயலாளர் பரணிதரன், நிர்வாக செயலாளர் பிரியாணி, சர்ச்சைக்குரிய தேரர், நீராவியடி பிள்ளையார் ஆலய தரப்பினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.