தமிழக தலைமைகளை விமர்சித்தல் ஈழ தமிழர்களுக்கு ஆரோக்கியமில்லை – சபா குகதாஸ்

தமிழக தலைமைகளை விமர்சிப்பது ஈழத் தமிழர்களுக்கு ஆரோக்கியமானதல்ல என முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவா் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தாயகமாக கொண்டு வாழும் ஈழத் தமிழர்களுக்கு ஒரு ஆதரவான பக்கபலமான தேசம் என்றால் அது இந்தியாவின் தமிழ்நாடு தான். அங்கு வாழ்கின்ற எட்டுக் கோடி தொப்பிள் கொடி சொந்தங்களும் அவர்களின் அரசியல் தலைமைகளும் ஈழத் தமிழர்களின் பாதுகாப்புக்கு முக்கியமானவர்கள்.

ஈழத் தமிழர்களுக்கும் அவர்களது தேசியப் பிரச்சினைக்கும் நிரந்தர தீர்வு பெற்றுக் கொடுப்பதற்கு தற்போதைய பூகோள அரசியல் சூழ்நிலையில் தென் ஆசிய நாடுகளின் வல்லரசாக விளங்கும் இந்தியாவின் மத்திய அரசினால் மட்டுமே முடியும். அதனை சரியான பொறிமுறை ராஐதந்திரத்தின் ஊடாக பெற்றுக் கொள்ள ஈழத் தமிழ்த் தலைமைகள் இன்றுவரை ஒன்றுபடவில்லை.

இவ்வாறு இருக்கும் போது இந்திய மத்திய அரசிற்கான தொடர்ச்சியான அழுத்தங்களை பிரையோகிக்க தமிழக தலைமைகளை கூட்டாக கையாள ஈழத் தமிழர்களின் தலைமைகள் இன்றுவரை முயற்சிக்கவில்லை என்ற வேதனையான இடைவெளி தொடர்கிறது.

இவ்வாறு நிலைமை இருக்க தற்போது ஈழத் தமிழர் மத்தியில் சில அரசியல்வாதிகள் ஊடகங்களின் பசிக்கு தமிழக அரசியல் தலைமைகளை கால சூழ்நிலையை கருத்தில் கொள்ளாது விமர்சிப்பது ஈழத் தமிழர்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வு நோக்கிய பயணத்திற்கு ஆரோக்கியமானதாக ஒருபோதும் அமையமாட்டாது.

ஈழத் தமிழர்கள் தொடர்பான பிரச்சினைக்கு இந்திய மத்திய அரசிற்கு தொடர் அழுத்தத்தை கொடுக்கக் கூடிய சக்தியாக விளங்குவது தமிழக தலைமைகளும் மக்களும் தான் இவ்வாறான நிலையில் ஒரு பலமாக இருக்கும் மக்கள் திரட்சியை கொண்ட தமிழகத்தை விமர்சிப்பதை ஈழத்தில் உள்ள சில அரசியல்வாதிகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்திய மத்திய அரசாங்கம் தமிழ்நாட்டை ஒரு பலமாக சக்தியாக இருப்பதை விரும்பாமல் துண்டுகளாக பிரித்து கையாள முயற்சிக்கும் போது ஈழத் தமிழர்களாகிய நாமும் அந்த நிகழ்ச்சி நிரலில் சென்று விடக்கூடாது. சிங்கள பெருந்தேசியவாதத்தில் இருந்து ஈழத் தமிழர்களை ஒரு இனமாக பாதுகாக்க இன்று உள்ள பலமான தமிழகமே தேவை அதுமட்டுமல்ல ஈழத் தமிழர் விடையத்தில் ஒன்றுபட்ட பலமான தமிழக தலைமைகளே அவசியம்.

இன்று ஈழத் தமிழர் அரசியல் தரப்பில் உள்ள தலைமைகள் அதனை கையாளத் தவறினாலும் சில ஆண்டுகளுள் இதை சிறப்பாக முன்னெடுக்கக் கூடிய இளைய அரசியல் தலைமைகள் ஈழத்தில் வளர்ந்து வருகின்றார்கள் அவர்கள் கையாளக் கூடியவாறு தமிழக தலைமைகளை விமர்சிப்பதை தவிர்த்து வழிவிடுங்கள்”  என்றார்