வன்முறைகள், மீறல்களுக்கு வழிவகுக்கும் புதிய பயங்கரவாதத் தடை விதிமுறைகள் – சர்வதேச யூரர்கள் ஆணைக்குழு குற்றச்சாட்டு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் வெளியிடப்பட்டிருக்கும் பயங்கரவாதத் தடை தொடர்பான விதிமுறைகள், ஏற்கனவே மிகவும் ஆழமான குறைபாடுகளைக் கொண்டிருந்த பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மூலம் மேலும் வன்முறைகளும் மீறல்களும் இடம்பெறுவதற்கு வழிவகுக்கும் என்று சர்வதேச யூரர்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சர்வதேச யூரர்கள் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பவை வருமாறு –

“பயங்கரவாதத்தடை தொடர்பான விதிமுறைகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. அதில் 11 அமைப்புக்கள் ‘தீவிரவாத அமைப்புக்களாக’ இனங்காணப்பட்டிருக்கின்றமையுடன் இது போன்ற அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேணுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு மாறாக செயற்படுபவர்களை 20 வருடங்களுக்கும் அதிகமான காலம் சிறைப்படுத்தவும், அத்தகைய செயற்பாடுகள் அல்லது அவற்றை முன்னெடுப்போருடன் தொடர்புகளைப் பேணியவர்களை 10 வருடங்களுக்கும் அதிகமான காலம் சிறைப்படுத்தவும் முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடுதல் என்ற பெயரில் மோசமான விதிமுறைகளை நடைமுறைப்படுத்துகின்ற இலங்கையின் நிறைவேற்றதிகாரப் போக்கின் தன்மையே தற்போதும் பின்பற்றப்பட்டுள்ளது. எவ்வித விசாரணைகளுமின்றி ஒருவரை இருவருட காலம் வரை தடுத்துவைப்பதற்கு அனுமதியளிக்கும் தீவிரமயமாக்கலை ஒழித்தல் தொடர்பான விதிமுறைகள் வெளியிடப்பட்டு ஒரு மாதகாலத்தின் பின்னர் இந்த விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

தன்னிச்சையான கைது நடவடிக்கைகள் தொடர்பான அடிப்படைத் தராதரங்களை மீறுவதற்கான நியாயமாக தேசியப் பாதுகாப்பு என்ற விடயத்தைக் குறிப்பிடுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாததாகும்” என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.