ஜெனீவா பொறிமுறை தொடர்பில் மாற்றுக் கருத்துக்கள்  இருக்கக் கூடாது- சகி கலகே கருத்து

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் விசாரணை பொறிமுறை தொடர்பில் மாற்றுக்கருத்துக்கள் எவையும் காணப்படக்கூடாது என ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி சகி கலகே தெரிவித்துள்ளார்.

மேலும் நாங்கள் ஜெனீவாவின்நிகழ்ச்சி நிரலில் இருக்கின்றோம்,நாங்கள் அச்சுறுத்தல்கள் குறித்து யதார்த்தபூர்வமாக சிந்திக்கவேண்டும், என்ன நடந்தது என்ற உண்மையை தெரிவிப்பதற்கு தாமதமின்றி நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்  என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து  ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் சகி கலகே தெரிவிக்கையில்,

எங்கள் கருத்தினை முன்வைப்பதற்கு எங்களிற்கு இன்னுமொரு வாய்ப்பு கிடைக்காது நாங்கள் பொறுப்புக்கூறல்விடயத்தினை திறந்த மனதுடன் அணுகவேண்டும். முன்னைய அரசாங்கம் இணை அனுசரணை வழங்கிய தீர்மானத்திலிருந்து இலங்கை விலகியது பொருத்தமற்ற விடயம் .

சர்வதேச நீதிமன்றத்தின் முன்னால் இலங்கையைகொண்டு செல்ல முடியாது என்பதற்காக இலங்கை விடயங்களை அலட்சியப்படுத்த முடியாது . யுத்த குற்றச்சாட்டுகள் குறித்த விவகாரங்களை கையாள்கின்றவர்கள் யுத்தத்தின் இறுதிகாலங்கள் குறித்தே கவனம் செலுத்துகின்றனர்.   விடுதலைப்புலிகளின் தோல்வியை சகிக்க முடியாத உள்நாட்டு வெளிநாட்டு சக்திகளால் இலங்கை இலக்குவைக்கப்படுகின்றது

ஜெனீவா சவாலை எதிர்கொள்வதற்கு உறுதியான முயற்சிகள் அவசியம்.   பெப்ரவரி மார்ச் அமர்வு முடிவடைந்துவிட்டதால் இலங்கை தற்போதைக்கு ஜெனீவாவிலிருந்து எழக்கூடிய அச்சுறுத்தலை மறந்துவிடாது. படையினருக்கு எதிராக பொய்களை தெரிவிப்பவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக காணப்படுகின்றார்கள்.  இது மிகவும் துரதிஸ்டவசமானது” என்று மேலும் தெரிவித்துள்ளார்.