உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் -மன்னார் ஆயர் கோரிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கு உண்மையான ஒரு நீதியும் உண்மையான தீர்ப்பும் கிடைக்கப் பெற வேண்டும் என மன்னார் மறை மாவட்ட ஆயர் இமானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்தார்.

-மன்னார் மறைமாவட்ட ஆயர் விடுத்துள்ள செய்தியில் மேலும் குறிப்பிடுகையில்,

எமது ஆண்டவர் இயேசு கிறிஸ்து மரித்து அடக்கம் செய்யப்பட்டு மீண்டும் உயிர் பெற்றர். இந்த நாளிலே நாங்கள் மகிழ்ச்சி அடைவதற்கு காரணம் இயேசு நாதர் எமக்காக உயிரையே தியாகம் செய்தார்.

ஆனால் அவருடைய வாழ்க்கை முடிவடையவில்லை. அவர் அதை தாண்டி சென்று மீண்டும் உயிர் பெற்றார். அப்படியாக உயிர் பெற்று இயேசுநாதர் இன்றும் வாழ்கின்றார்.

நாங்கள் இந்த உயிர்த்த ஞாயிறு அன்று இதற்கு முன்பாக இரண்டு வருடங்களுக்கு முன்பு பாஸ்கா திருவிழா அன்று திருப்பலிக்காக சென்றிருந்த எத்தனையோ மக்கள் குண்டுவெடிப்பு காரணமாக உயிர் இழந்தார்கள். அவர்களை இன்றைய தினம் நாம் விசேடமாக நினைவு கூறுவோம்.

அவர்களுக்கு உண்மையான ஒரு நீதியும் உண்மையான தீர்ப்பும் கிடைக்கப் பெற வேண்டும் என்று நாம் இறைவனிடம் மன்றாடுவோம்.

அத்தோடு இன்றைய கால கட்டத்தில் இந்த கொரோனா நோயால் நாங்கள் மிகவும் அச்சுறுத்தப்பட்டு வாழுகின்றோம். இப்படியான நேரங்களில் நாங்கள் சில நேரம் தேவாலயத்திற்கு சென்று திருப்பலியில் கலந்து கொள்ள முடியாத நிலை கூட காணப்படலாம்.

இருந்தாலும் நாம் வீடுகளிலேயே இருந்து இந்த உயிர்த்த இயேசுவை மகிழ்சியாக கொண்டாடுவோம்.

உயிர்த்த இயேசு நமக்கு வெற்றியை பெற்று தருவார் என்ற நம்பிக்கையுடன் எமது வாழ்கையை சிறப்பாக கொண்டு செல்வோம்.இந்த உயிர்ப்பு விழா உங்களிலும் உங்கள் குடும்பங்களிலும் புத்துணர்சியையும் புது வாழ்வையும் தரவேண்டும்.

நீங்கள் புத்துயிர் பெற்றவர்களாக இந்த உயிர்த்த யேசுவின் மக்களாக நாங்களுக்கு ஆசிக்கின்றோம்.என மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை விடுத்துள்ள ஆசிச் செய்தியில் மேலும் தெரிவித்தார்.

ஏப்ரல் 21, 2019 அன்று நடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் 8 தற்கொலை குண்டுத்தாரிகள் உள்ளடங்களாக சுமார் 277 பேர் இறந்ததாக இலங்கை அரசு கூறுகிறது. மேலும் 500க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.