இன்று மாலைக்குள் தீர்வு இல்லையேல், இனி உணவுத்தவிர்ப்பு போராட்டம்தான் : சுகாதாரத் தொண்டர்கள் அறிவிப்பு!

இன்று மாலைக்குள்  தமக்கான தீர்வினை வழங்காத பட்சத்தில் தமது போராட்டம் உணவு தவிர்ப்பு போராட்டமாக மாற்றமடையும் என சுகாதார தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்

இன்று  வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துற்கு முன்னால் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வடக்கு மாகாண  சுகாதார தொண்டர்கள் வடக்குமாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் கடந்த ஏழு நாட்களாக ஈடுபட்டு வருகிறார்கள்.

தமக்கு வழங்கப்பட்ட நியமனத்தை மீள  பெற்று தருமாறு கோரிக்கை விடுத்து வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சுகாதார தொண்டர்கள் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னாள் ஏழாவது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

கடந்த 2019ஆம் ஆண்டு அப்போதைய ஆளுநர் எடுத்த முயற்சியின் பயனாக வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த தொண்டர்களாக கடமையாற்றிய சுகாதார பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் முகமாக சுகாதார பணியாளர்களுக்கு நியமன கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

எனினும் குறித்த நியமனத்தில் முறைகேடு இடம்பெற்றதாக பாதிக்கப்பட்ட சுகாதார பணியாளர்கள் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக, குறித்த நியமனங்கள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், நிரந்தர நியமன கடிதம் பெற்ற சுகாதார பணியாளர்கள் 454 பேர் நீண்ட காலமாக தொண்டு அடிப்படையில் வைத்தியசாலைகளில் கடமையாற்றியதாகவும் எனவே தமக்கு நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி  வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.