தாக்குதல் குறித்து முன்னெச்சரிக்கைக் கடிதம் வெளியானது

தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாசீம் மற்றும் அவரது சகாக்கள் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தும் வாய்ப்பு இருக்கின்றது எனக் கூறி கடந்த ஏப்ரல் 9ஆம் திகதி தேசிய புலனாய்வுத்துறையின் தலைவர் சிசிர மெண்டிஸ், பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு அறிவித்திருக்கும் கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கடிதத்தை ‘தமிழன்’ செய்திச் சேவை வெளியிட்டுள்ளது.

முன்னதாக நேற்று நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்கியிருந்த சிசிர மெண்டிஸ் , தாக்குதல் அச்சுறுத்தல் குறித்து முன்னதாக எழுத்து மூலம் பொலிஸ்மா அதிபருக்குத் தெரியப்படுத்தியிருந்தார் எனக் கூறியிருந்தார்.

அதேவேளை, இன்று அறிக்கையொன்றை வெளியிட்ட பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தாக்குதல் குறித்து எந்த முன்னெச்சரிக்கையும் தனக்குக் கிடைக்கவில்லை எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.