நவீன உலகில் அனைவரும் வேகமான வாழ்வைத்தான் வாழ்ந்து வருகின்றோம். காலை எழுந்தவுடன் ஆரம்பிக்கும் பரபரப்பு இரவு தூங்கும் வரை நம்மை விடுவதில்லை. இதன் விளைவாக மன அழுத்தத்திற்கு உட்படுகின்றோம். மன அழுத்தம் ஒரு நோய். இன்றைய காலகட்டத்தில் நாளிதழ்களில்அதைப் பற்றிய செய்திகளை நாம் பார்க்கின்றோம். உலகளவில் ஏற்படும் நோய்களில் மன அழுத்தம் தான் முதலிடத்தில் உள்ளது. ஆனால் பெரும்பாலான நேரங்களில் பலரும் இதை ஒரு நோய் போன்றே உணருவதில்லை. மன அழுத்தம் என்பது ஒரு தீவிரமான மனநோய் ஆகும்.
நோய்களை உண்டாக்கக்கூடிய உடல் அல்லது மன ரீதியான பதட்டம் அளிக்கும் எந்தவொரு உடலியல் மற்றும் இரசாயன அல்லது மனவியல் காரணகளை மன அழுத்தம் எனக் கருதலாம். அதிர்ச்சி, நோய்த் தொற்று, விஷம், உடல்நலக் குறைபாடு மற்றும் காயங்கள் போன்றவற்றை உடலியல் மற்றம் இரசாயன காரணிகளாகக் கூறலாம். பல வகையான மனவியல் காரணிகள் இருக்கின்றன.
முரண்கள் நிறைந்த வாழ்வு விந்தையானது மட்டுமல்ல, சவால்கள் நிறைந்ததும்கூட. ஆசை நிராசையாவதும், உறவு பிரிவதும் வாழ்வியல் வாடிக்கை. சமநிலையில் இருக்கும் மனதிற்கு அது தெரியும். இருப்பினும் உண்மையை எதிர்கொள்ளும் போது, வாழ்வின் ஏமாற்றத்தையும், பிரிவின் துயரையும் ஏற்றுக் கொள்ள முடியாமல் மனித மனம் தடுமாறும். தடம் மாறும். பின் சில மணி நேரத்திலோ, சில நாட்களிலோ மனம் தன் இயல்பிற்கு திரும்பும். ஏமாற்றங்களும், பிரிவுகளும், இழப்புகளும் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு ஆழமானதாக இருந்தால், மனம் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியாமல் சோகத்தில் தேங்கி விடும். இந்த தேக்க நிலை அதாவது, நிஜத்தை ஏற்க மறுக்கும் மனதின் போராட்டம் மன அழுத்தத்தின் ஒரு வகை ஆகும்.
மன அழுத்தம் என்றவுடன், அதனால் பாதிக்கப்பட்டவர் சோகமாக வலம் வருவார்கள் என்றோ எந்நேரமும் அழுவதற்குத் தயாராக இருப்பார்கள் என்றோ எண்ண வேண்டாம். வாழ்வின் முக்கிய நிகழ்வுகளின்மீதான ஈடுபாட்டுக் குறைவே மன அழுத்தம். மன அழுத்தத்திற்கு உள்ளானவர்கள் அதிகமாகவோ, குறைவாகவோ சாப்பிடுவார்கள். தூங்குவார்கள். சுற்றத்தை விட்டு விலகுவார்கள். நட்பைத் தவிர்த்து தனிமையை விரும்புவார்கள். வழக்கமான செயல்களில் நாட்டமின்றி இருப்பார்கள். “பூஞ்சை மனம் கொண்டவர் மன அழுத்தத்திற்கு உள்ளாகும் போது எளிதில் உடைந்து, மனம் சோர்வடைந்து வீழ்ந்து விடுகிறார்கள். உறுதியான மனம் கொண்டவர்கள் முயற்சிகளின் அளவை இரண்டு மடங்காக்கி மன அழுத்தத்திலிருந்து வெளிவர முயற்சி செய்வார்கள்.” என காண்டோபர் கூறுகின்றார். எனினும் இக்கூற்று அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை.
மன அழுத்தத்திற்கு உட்பட்டவர்கள் ஒரு செயலைச் செய்வதற்கான ஆற்றல் குறைந்தவர்களாகவோ, ஆற்றல் இல்லாதவர்களாகவோ இருப்பார்கள். வழக்கத்திற்கு மாறாக அதீத மறதியுடன் ஒருவித குழப்ப மனநிலையில் இருப்பார்கள். கோபமும், வருத்தமும், பயமும் மிகுந்து ஒரு வித விளிம்பு நிலையில் அல்லது உணர்ச்சிகள் வெடித்து விடும் நிலையில் அவர்கள் இருப்பார்கள்.
மன அழுத்தம் என்பது வயது வித்தியாசம் இல்லாமல் ஆண் மற்றும் பெண் என இரு பாலினத்தவர்க்கும் பொருந்தக்கூடிய ஒரே அளவிலானவை கிடையாது. இன்றைய காலகட்டத்தில் வேலை ஒதுக்கப்பட்ட பின், தங்களின் மூத்த பணியாளர்கள் மற்றும் மேலாளர்களை திருப்திப்படுத்தும் முயற்சிகளில் பலருக்கும் மன அழுத்தம் ஏற்படுகின்றது. இலக்கை அடையாத நேரத்தில் தான் மன அழுத்தம் ஏற்படுகின்றது.
முன்னர் செய்திகளில் அதிகமாக இடம்பெறாமல் இருந்த மன அழுத்தம், கடந்த பத்து ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. அபிரிமிதமான அளவில் அதிகரித்துள்ளது. 30 கோடிக்கும் அதிகமான மக்கள் அதாவது உலக மக்கள் தொகையில் சுமார் 4 சதவீதத்தினர் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர் என உலக சுகாதார அமைப்பு (WHO) 2015இல் வெளியிட்ட புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. மற்றும் முன்கூட்டடியே மரணத்திற்கான காரணத்தில் மன அழுத்தம் பத்தாவது இடத்தில் உள்ளது.
19 வயதிற்கும் 29 வயதிற்கும் இடைப்பட்டவர்களின் மரணத்திற்கு இரண்டாவது முக்கிய காரணம் தற்கொலை ஆகும். தற்கொலைக்கும் மன அழுத்தத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. உலகில் ஒரு நிமிடத்திற்கு இருவர் இதனால் உயிரிழப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. உலக அளவில் மனிதர்களிடமுள்ள குறைபாட்டில் மன அழுத்தமே முதலிடத்தில் உள்ளது.
மனநோயால் பாதிக்கப்பட்டவர்களை பேய் பிடித்துள்ளது என்று கருதி சமூகத்திலிருந்து விலக்கி வைப்பதோ, மந்திரவாதிகள் எனக் கருதுபவர்களிடம் கொண்டு செல்வதோ முன்பு வாடிக்கையாக இருந்தது. அந்தக் காலகட்டத்துடன் ஒப்பிடும் போது இன்று மன அழுத்தம் குறித்த விழிப்புணர்வு முன்னேற்றம் அடைந்துள்ளது. எனினும் மன அழுத்தத்தால் பாதிப்பிற்கு உள்ளானவர்கள் இன்றும் தவறாக புரிந்து கொள்ளப்படுகின்றனர்.
மன அழுத்தம் இருந்தால், பதட்டம் ஏற்படும். இவ்வாறு பதட்டத்தின் போது இதயத்துடிப்பானது அளவிற்கு அதிகமாக இருப்பதால் உயர் குருதி அழுத்தம் ஏற்படும். ஆகவே அடிக்கடி பதட்டம் ஏற்பட்டால், மருத்துவரை அணுக வேண்டும். பொதுவாகவே பதட்டம் ஏற்பட்டாலே தலைவலி ஏற்படும் என்பது தெரிந்த ஒன்றே. ஆனால் அதிகளவில் மன அழுத்தம் இருந்தால், மூளைக்கு செல்லும் இரத்தக் குழாய்களிலும் அழுத்தம் மற்றும் துடிப்பு அதிகரிக்கும். இதனால் கடுமையான ஒற்றைத் தலைவலி ஏற்படும்.
நவீன உலகில் கூந்தல் உதிர்தலுக்கு முக்கிய காரணம் மன அழுத்தம் தான். சிலருக்கு இளமையிலேயே வழுக்கை ஏற்படுவதற்குக் காரணமும் மன அழுத்தம் தான். எனவே அதிக வேலைப்பழுவினால் பதட்டடம் மற்றும் மன அழுத்தம் இருந்தால், உடனே சரிசெய்து பாடல் கேட்பது, உடற்பயிற்சி செய்வது, விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும். மன அழுத்தம் இருந்தால் அடிக்கடி மறதி ஏற்படும். ஏனெனில் வாழ்க்கையானது ஒரே அழுத்தத்தில் இருக்கும் போது எதையும் ஞாபகத்தில் வைத்திருக்க முடியாது. எனவே இவ்வாறு மறதி ஏற்பட்டால் உடனே மனதை அமைதி அடையச் செய்ய வேண்டும்.
பொதுவாக நரை முடியானது பரம்பரை வழியாக அல்லது மன அழுத்தத்தினால் தான் ஏற்படும். அதிலும் தற்போது இளம் வயதிலேயே நரைமுடியானது வந்து விடுகின்றது. எனவே இவ்வாறு இளம் வயதிலேயே நரைமுடி ஏற்பட்டால், உடனே அதனைச் சரிசெய்ய முயற்சி செய்ய வேண்டும். மன அழுத்தமானது அதிகம் இருந்தால், சீக்கிமாகவே முதுமைத் தோற்றம் வந்துவிடும்.
சமூக அறிவியலை அறிந்தோர் மன அழுத்தத்திற்கு உள்ளாகி நாம் கண்டதில்லை. களத்தில் நின்று நித்தம் எத்தனையோ போராட்டங்களை காண்போர் மன அழுத்தத்திற்கு உள்ளாகுவதில்லை. இத்தனைக்கும் அவர்கள் காணாத வலி, துயரம், இன்னல்கள் இல்லை. மன்னியுங்கள் என மன்னிப்புத் தான் மன அழுத்தமற்றவர்களின் தாரக மந்திரம். மன்னிக்கும் மனம் இருப்பவர்களுக்கு மன அழுத்தம் வருவதில்லை. அப்படியே வந்தாலும் அது அவர்களிடம் தங்குவதில்லை.
தற்காலிக மன அழுத்தம் என்பது அதுவாகவே சரியாகி விடும். ஆனால் சில பிரச்சினைகளால் சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல் போனாலோ, வேலைகளில் பாதிப்பு ஏற்பட்டாலோ அது தீவிர மன அழுத்தம். இதற்கு மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்துக் கொள்வதே சிறந்தது.
உ.டனன்சியா
வணிகப்பிரிவு 2019
முகாமைத்துவபீடம்
யாழ். பல்கலைக்கழகம்