யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்து கொண்டார்.
சிறீலங்காவில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் வசிக்கும் அம்பிகை செல்வகுமார் என்பவர் சாகும்வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்.
அவருடைய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, தாயகத்தில் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதே நேரம் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இலங்கை அரசாங்கத்திற்கு சர்வதேசம் மேலும் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என்றும் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்.
தமிழ்தேசிய பரப்பிலே தீவிரமாக செயற்பட்டு வரும் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய டிஎம்கே சிவாஜிலிங்கம், இன்றைய தினம் நல்லூர் போராட்ட களத்திற்கு சென்று மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்ததுடன் போராட்டத்தை மென் மேலும் வலுவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து சென்றுள்ளார்.
அதே நேரம் அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம், குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டு வலுச்சேர்க்க வேண்டும் என்று அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில், பிரித்தானியாவின் புற நகர் பகுதிகளான கொவண்றி, மற்றும் ரக்பி பகுதி மக்கள் இணைந்து சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தினை நடாத்தி வரும் அம்பிகா செல்வகுமாருக்கு ஆதரவினை நல்கும் வண்ணம் இன்றைய தினம் வாகன பேரணியாக அவர் உண்ணாவிரதம் மேற்க்கொள்ளும் அரங்கிற்கு சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.