வடக்குத் தீவுகளை எந்த நாட்டுக்கும் வழங்கப்போவதில்லை – அமைச்சர் டலஸ் அழகப்பெரும

வடக்கிலுள்ள தீவுகளை எந்த நாட்டுக்கும் வழங்கப்போவதில்லை என மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற சந்திப்பு ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைதீவு ஆகிய தீவுகளுக்கு தற்போது டீசல் மூலமே மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்படுகின்றது. இந்நிலையில், அங்கு காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சார உற்பத்தித் திட்டத்தை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் 12 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியுடன் சீனாவின் பங்களிப்புடன் இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதற்கான நடவடிக்கையை அரசாங்கம் எடுத்திருந்தது.

இதேவேளை, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, வடக்கில் இந்தத் திட்டத்துக்கு 12 மில்லியன் அமெரிக்க டொலரை நன்கொடையாக இலங்கைக்கு வழங்குவதாகவும், அரசாங்கத்திடம் அறிவித்திருந்தார். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் அரசாங்கம் இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் மக்களின் நலன்களைக் கருத்தில்கொண்டு முடிவு எட்டப்படும் என்றும் அமைச்சர் டலஸ் குறிப்பிட்டார்.