சமத்துவம் வேண்டி சத்தியாகிரகப் போராட்டம்

வறணி வடக்கு சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தின் உபயகாரர்களால் ஆலய வழிபாட்டில் அனைவருக்கும் சமத்துவம் வேண்டும்! ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது உறுதிப்படுத்தப்படவேண்டும்! ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து ஆலய முன்றலில் இன்று 28 செவ்வாய்க்கிழமை மு.ப. 10 மணியளவில் சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது

முப்பது வருடங்கள் வரை திருவிழா இடம்பெறாதிருந்த இவ் ஆலயத்தில், கடந்த வருட தேர் திருவிழாவின்போது, பக்தர்கள் எவரும் வடம் பிடிக்க அனுமதிக்கப்படாது JCB இயந்திரம் கொண்டு தேர் இழுக்கப்பட்டமை அனைவரும் அறிந்தது.Varani சமத்துவம் வேண்டி சத்தியாகிரகப் போராட்டம்

இந்நிலையில் இவ்வருட திருவிழாவை நடத்தாது ஆலய நிர்வாகத்தினர் நிறுத்தி வைத்துள்ளமை அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குறித்த ஆலய உபயகாரர்களும், அடியவர்களும் இணைந்து கடந்தவாரம் போராட்டங்களைத் தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு முன்பாக மேற்கொண்டிருந்தனர்.

இதில் அம் மக்களுக்கான தீர்வு வழங்கப்படாத நிலையில், அவர்கள் தமது போராட்டத்தைத் தொடர் சத்தியாக்கிரகமாக ஆலயச் சூழலில் இன்று ஆரம்பித்துள்ளனர்

இப் போராட்டத்தில் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு , சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு உபயகாரர்கள் மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.