இந்த நாடு சிங்கள பௌத்த நாடு மாத்திரமல்ல, தமிழ், முஸ்லிம், இந்து, இஸ்லாம் கத்தோலிக்கம் என எல்லா இன மதங்களை உள்ளடக்கிய நாடாகும் எனத் தெரிவித்த மனோகணேசன், இந்த பன்மைத் தன்மையை இந்த அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும் என்றார்.
முல்லைத்தீவு – துணுக்காய், கல்விளான் பகுதியில் “பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை” என்னும் எழுச்சிப்பேரணியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மலையக மக்கள் முன்னணி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் மேலும் தெரிவிக்கையில்,
“கோட்டாபய சொல்வதைப்போல ஒரே நாடு, ஒரேசட்டம், ஒரே இனம், ஒரேமொழி, ஒரே மதம் என்றால் எங்களால் சிரிக்கவே முடியும். ஆகவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைப் பார்த்து நான் சிரிக்கின்றேன். இச் சிரிப்பு எக்காள, ஆணவச் சிரிப்பல்ல உண்மையான சிரிப்பு, நியாயமான சிரிப்பாகும். இலங்கையில் பல மொழிகள் பேசும்,பல மதங்கள் உள்ள,பல இனங்கள் வாழும் பன்மைத்தன்மைவாய்ந்த நாடு. இந்த கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கம் ஒரே நாடு, ஒரே சட்டம் எனக் கூச்சல் எழுப்புகின்றது.
இவ்வாறு கூச்சல் எழுப்பும்போது ஒரே மொழி, ஒரேமதம், ஒரே இனம் என்று நீண்டுபோயிருக்கின்றது. அதை எக்காலத்திலும் தமிழ் பேசும் மக்கள் ஏற்றுக்கொள்ளவே மாட்டோம்.
இந்த நாட்டில் எமக்கு வரலாற்றுரீதியாக சொந்தம் இருக்கின்றது. உரிமை இருக்கின்றது. இந்தநாடு சிங்கள பௌத்த நாடு மாத்திரமல்ல, தமிழ், முஸ்லிம், இந்து,ஸ்லாம் கத்தோலிக்கம் என எல்லா இன மதங்களை உள்ளடக்கிய நாடாகும்.
அந்த நியாயத்தினை நாடுமுழுக்க எதிரொலிக்க வைக்கும் ஒரு ஜனநாயக நடைப் பயணம்தான் பொத்துவில் முதல் பொலிகண்டிவரை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
அன்றும், இன்றும், எப்போதும் நான் எங்கள் கட்சி சார்பாக எப்போதுமே அநீதிக்கு எதிராக குரல் கொடுத்துக் கொண்டேயிருக்கின்றேன்