வடக்கில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

வடக்கு மாகாணத்தில் கடந்த 20 நாட்களில்  351 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழில் அவரது அலுவலகத்தில் இன்று  நடத்தப்பட்ட ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “வடக்கு மாகாணத்தில் கடந்த ஜனவரி முதலாம் திகதியில் இருந்து நேற்று வரை 351 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில், வவுனியா மாவட்டத்தில் 234 பேருக்கும், மன்னாரில் 70 பேருக்கும் யாழ்ப்பாணத்தில் 32 பேருக்கும் கிளிநொச்சியில் பத்துப் பேருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐந்து பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது” என்றாா்.

இலங்கையில் இதுவரை கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 54 ஆயிரத்து 419 ஆக உயர்ந்துள்ளது.

இதில் 6 ஆயிரத்து 931 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 806 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

மேலும் இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 273 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.