மருதனார்மடம் கொத்தணியில் நேற்று நால்வருக்கு தொற்று – சுகாதார சேவைகள் பணிப்பாளர்

மருதனார்மடம் கொரோனா கொத்தணியில் நேற்று நால்வர் தொற்றாளர்களாகக் கண்டறியப்பட்டனர் என்று வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முல்லேரியா மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிலைய ஆய்வு கூடங்களில் நேற்று நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளிலேயே இந்த நால்வருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

தொற்றாளர்களாக இனங்காணப்பட்ட நால்வரும் சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் மருதனார்மடம் சந்தை வியாபாரிகளுடன் நேரடித் தொடர்பு கொண்டிருந்தனர் என்று விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இதனால், மருதனார்மடம் கொரோனா கொத்தணி இனங்காணப்பட்ட 16ஆம் நாளான நேற்றுவரை 109பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.