சுனாமி பேரனர்த்தத்தின் 16ஆம் ஆண்டு நினைவு இன்று – தமிழர் தாயகத்திலும் நினைவு கூரல்

சுனாமி பேரனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்தப் பேரனர்த்தத்தில் காவு கொள்ளப்பட்ட உறவுகள் நினைவாக தமிழர் தாயகத்திலும் – நாடு முழுவதும் நிகழ்வுகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

2004 டிசெம்பர் 26 ஆம் திகதி சுமத்ராதீவின் அருகே கடலில் ஏற்பட்ட 9.2 ரிக்டர் அளவிலான நில நடுக்கத்தால் ஆழிப்பேரலை உருவானது. இந்தப் பேரலை இலங்கை, இந்தியா, இந்தோனேஷியா, தாய்லாந்து, மியான்மர் என 14 நாடுகளின் கரையோரப் பகுதிகளை தாக்கியது.

இலங்கையில் தமிழர் தாயகமான யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்கள் உட்பட நாட்டின் காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை மாவட்டங்கள் பேரலையால் தாக்கப்பட்டன. இதனால், 35 ஆயிரத்து 322 மக்கள் கொல்லப்பட்டனர். 5 இலட்சம் பேர் இடம்பெயர்ந்தனர். 90 ஆயிரம் பேர் வீடுகள், சொத்துக்களை இழந்தனர்.

பேரலை தாக்கிய நாடுகள் முழுவதிலுமாக 2 இலட்சத்து 29 ஆயிரத்து 866 பேர் உயிரிழந்தனர். ஒரு இலட்சத்து 25 ஆயிரம் பேர் காயமடைந்தனர். 43 ஆயிரத்து 786 பேர் காணாமல் போயினர்.

இந்தப் பேரனர்த்தத்தின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று, கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் நினைவேந்தப்படவுள்ளது. சுகாதார விதிகளை அனுசரித்து நினைவேந்தலை நடத்த நமது நாட்டிலும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.