யாழ் மாவட்டத்தில் 54 ஆயிரம் பேர் பாதிப்பு – 2 ஆயிரம் வீடுகள் சேதம்

புரெவி புயலின் காரணமாக ஏற்பட்ட மழைவீழ்ச்சி யாழ். குடாநாட்டில் தொடரும் நிலையில் யாழ்ப்பாணத்தில் மட்டும் 16 ஆயிரத்து 250 குடும்பங்களைச் சேர்ந்த 54 ஆயிரத்து 163 பேர் பாதிப்படைந்துள்ளமையோடு 2 ஆயிரத்து 443 வீடுகளும் சேதமடைந்துள்ளன என மாவட்டச் செயலகத் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

மாவட்டச் செயலகத்தினால் அனர்த்த முகாமைத்துவப் பிரிவிற்கு நேற்றைய தினம் இந்தப் புள்ளிவிவரம் அறிக்கையிடப்பட்டுள்ளது.

அதேநேரம் இவ்வாறு பாதித்த 54 ஆயிரத்து 163 பேரில் 1,072 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 687 பேர் 33 நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் சேதமடைந்த 2 ஆயிரத்து 443 வீடுகளில் 55 வீடுகள் முழுமையாக அழிவடைந்துள்ளன எனவும் அறிக்கையிடப்பட்டுள்ளது.

இதேநேரம் கடற்றொழிலாளர்கள் தொடர்ந்தும் தொழிலிற்கு செல்ல முடியாத நிலமையே காணப்படுவதனால் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகவே உள்ளது.