மாவீரர் நினைவேந்தலை தடுக்க முயற்சிக்கக்கூடாது – ரிட் மனுத்தாக்கல் செய்ய முனைப்பு

பயங்கரவாதத் தடைச் சட்டத்தையோ அல்லது தனிமைப்படுத்தல் சட்டவிதிகளையோ காரணம் காண்பித்து எதிர்வரும் நவம்பர் 25ஆம் திகதி முதல் 27ஆம் திகதிவரை நடத்தப்படவிருக்கும் நினைவேந்தல் (வீரர் நாள்) நிகழ்வுகளைத் தடை செய்ய முயற்சிக்கக் கூடாது என்று வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கு கட்டளையிடுமாறு கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தலையீட்டு நீதிப் பேராணை (ரிட்) மனுக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளன.

போரில் தமது பிள்ளைகளையிழந்த பெற்றோர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஊடாக இந்த நீதிப்பேராணை மனுவை எதிர்வரும் 20ஆம் திகதி தாக்கல் செய்யவுள்ளனர்.

இதற்கான அறிவித்தல் எதிர் மனுதார்களுக்கு மனுதாரர்களின் சட்டத்தரணியால் பதிவுத் தபால் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என அறியமுடிகிறது. எதிர்மனுதாரர்களாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பி.பி.எஸ்.எம். தர்மரட்ண, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மனுதாரர்களில் ஒருவரான வல்வெட்டித்துறை கம்பர்மலையில் வசிக்கும் சின்னத்துரை மகேஸ்வரி, தனது மகன் பண்டிதர் என்று அழைக்கப்படும் சின்னத்துரை ரவீந்திரன் 1985ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி போரில் உயிரிழந்தார் என்றும் அவரை நினைகூரும் வகையில் அனுமதியளிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.