சர்வதேச அழுத்தம் கொடுக்க வேண்டும் – ஆதி

கடந்த காலங்களில்  சலுகைகளாக வழங்கப்பட்ட, போரில் கொல்லப்பட்ட மக்களுக்கான நினைவேந்தல் மற்றும் மாவீரர் நாள் நினைவு கூரல் அனுமதிகள், தற்போது  அடக்குமுறைக்கு துணைபோகும்  பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பிரிவினைவாதத்தை தூண்டல் அல்லது புலிகளை மீளக்கட்டியெழுப்புதல் நடவடிக்கை என கூறி தடையுத்தரவுகள் விதித்து வருகிறது இலங்கை அரசாங்கம்.

இந்நிலையில், இலங்கை அரசாங்கத்தின் இந்த அடிப்படை உரிமை மீறல் குறித்து  ஆதி (சட்டத்தரணி, சமூக செயற்பாட்டாளர்- தமிழகம் ) ‘இலக்கு’ மின்னிதழுக்கு கருத்து தெரிவிக்கையில்,

“இலங்கை அரசாங்கம் தொடர்ந்து மக்களின் உணர்வுகளை மதிக்காமல், போரில் இறந்து போன தமது உறவுகளை நினைவு கூர தடை விதித்து வருகிறது.

போரில் இறந்து போன உறவுகளை நினைவு கூருவதன் வழியில் தமிழீழக் கோரிக்கைக்கு புத்துணர்ச்சி ஊட்டப்படுவதாக இலங்கை அரசு அஞ்சுகின்றது.

இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளின் கவனத்திற்கு இவ்விடயத்தை எடுத்துச்சென்று, இலங்கை அரசின் தமிழர் விரோத போக்கை கைவிட வலியுறுத்த வேண்டும்.

இங்குள்ள தமிழ் தேசிய அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்துவன் மூலம் இலங்கை அரசை நெருக்கடிக்கு உள்ளாக்கித் தமிழர் விரோத நடவடிக்கையிலிருந்து பின் வாங்க வைக்க முடியும்.” என்றார்.