அரசியல் தலைவர்களின் அடக்குமுறையை எதிர்த்து பணி செய்ய வேண்டிய நிலையில் நாம்- கலையரசன்

“பெரும்பான்மை அரசியல் தலைவர்களின் அடக்குமுறையை எதிர்த்து அரசியல் செய்யவேண்டிய நிலையில் நாங்கள் இருக்கின்றோம்” என நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன்  தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “பெரும்பான்மை அரசியல் தலைவர்கள் தமிழ் தேசிய அரசியலை நசுக்கும் செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றனர். எனவே இவ்வாறான சூழ்நிலையில் இளைஞர் அமைப்புகளும் பொது மக்களும் விழிப்புடன் இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

கடந்த காலத்தில் தமிழ் கிராமங்கள் அபிவிருத்தியில் பின்னோக்கி கவனிப்பாரற்று, அரசியல் ரீதியான அபிவிருத்தியில் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளது. இருந்தபோதும் தற்போது எமது மக்களுக்கு  பல அபிவிருத்தியை மேற்கொள்ள பல தடைகள் உள்ளது.

பாதிக்கப்பட்டு வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு ஒரு இலட்சம் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். ஆனால் போட்டிப் பரீட்சையில் கலந்து கொள்ளாது வீடுகளில் இருந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது கவலைக்குரிய விடயம். அடிப்படை வசதிகள் அற்ற மக்களுக்கு இந்த வேலைவாய்ப்பு வழங்கப்படவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.

அரசியல் ரீதியான அழுத்தங்கள் தொடராக இருக்கின்றதுடன் நாட்டில் அநியாயம் மேலோங்கி நிற்கிறது. இவை நிறுத்தப்பட வேண்டும்” என  தெரிவித்தார்.