முல்லைத்தீவு மற்றும் திருகோணமலையில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து இன்று முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பில் ஊடகவியலாளர்கள் இணைந்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
முல்லை மாவட்ட செயலக முன்றலில் போராட்டத்தை ஆரம்பித்த வடக்கு ஊடகவியலாளர்கள் தொடர்ந்து பொலிஸ் நிலைய முன்றலில் முற்றுகையிட்டு கவனயீர்ப்பை செய்த பின்னர் முல்லைத்தீவு வனவள திணைக்கழத்துக்கு முன்னும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கு மரங்களையும் நாட்டியிருந்தனர். அத்துடன் ஊடகவியலாளர்களால் ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றும் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில்,திருகோணமலையில் ஊடகவியலாளர் ஓருவர் மீதும் முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர்கள் இருவர் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து இன்று மட்டக்களப்பு மாவட்ட காந்தி பூங்காவுக்கு முன்பாகவும் ஊடகவியலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தினர்.
இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் “தாக்காதே தாக்காதே, ஊடகவியலாளர்களை தாக்காதே”, “நிறுத்து நிறுத்து ஊடக அடக்குமுறையை நிறுத்து,” “வேண்டும் வேண்டும், நீதி வேண்டும்” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஷ்ணகுமார் தலைமையில் இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மட்டு ஊடக அமையம்,இலங்கை ஊடகத்துறை தொழிற்சங்க சம்மேளனம் இணைந்து நடத்தியிருந்தனர்
ஊடகவியலாளர்கள் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் சுகாதார நடைமுறைகளை பேணியவாறு முகக்கவசம் அணிந்தும் சமூக இடைவெளியைப் பேணியும் குறிப்பிட்டளவு ஊடகவியலாளர்கள் பங்குபற்றுதலுடன் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்பட்டு ஊடக அடக்குமுறை இல்லாத ஒழிக்கப்பட வேண்டும். இதற்காக இந்த நாட்டிலே ஆட்சி அமைத்திருக்கும் புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட்டு ஊடகவியலாளர்கள் பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும் என இங்கு கோரிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் எஸ்.நிலாந்தன்,
“இந்த நாட்டில் மாறி மாறி வரும் அரசுகளில் ஊடக அடக்குமுறை என்பது தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. நாட்டில் நடைபெறும் சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை தடுக்க வேண்டிய அரசு, உயர் அதிகாரிகள் பாராமுகமாக இருக்கின்ற போது அந்த செய்திகளை வெளியிடுகின்ற ஊடகவியலாளர்கள் மீது கடத்தல்காரர்கள் தாக்குதல் நடத்துவதும் அவர்களில் சட்டம் தண்டிக்காது இருப்பதும் ஒரு தொடர்கதையாகி வருகின்றது.
இந்த நிலை இந்த புதிய அரசாங்கத்திலும் நடைபெறுகின்றது. எனவே ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்பட்டு ஊடக அடக்குமுறை இல்லாது ஒழிக்கப்பட வேண்டும். இதற்காக இந்த நாட்டிலே ஆட்சி அமைத்திருக்கும் புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட்டு ஊடகவியலாளர்கள் பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.