மகிந்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்திக்க ஆசைப்பட்டது ஏன்?

கொடிய பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்ததாக கூறும் பிரதமர் மகிந்த ராஜபக்ச 2005 ஆம் ஆண்டு அப்போதைய நோர்வே நாட்டின் சமாதான தூதுவர் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்திக்க ஆசைப்பட்டது ஏன் என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் தேசியக் கட்சியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவிக்கையில்…

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து சரணடைந்தவர்களுக்கு புனர்வாழ்வ ளித்தமையை கொடிய பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்த பெருமை இலங்கைக்கு உரித்தாகுமென நாட்டின் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்த கருத்து தொடர்பில் நான் ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகின்றேன்.

தமிழீழ விடுதலைப் புலிகள் கொடிய பயங்கரவாதியாக இருந்தால் ஏன் 2005 ஆம் ஆண்டு நோர்வே நாட்டின் சமாதான தூதுவர் எரிக் சொல்கிம் ஊடாக தலைவர் பிரபாகரனை சந்திக்க விரும்பினீர்கள், அத்தோடு கடந்த 2002ஆம் ஆண்டு போர் நிறுத்த காலத்தில் அப்போதைய நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைவர் பிரபாகரனுடன் போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்றினை செய்திருந்தார்.

எனவே அவர் கொடிய பயங்கரவாதி என்றா? அவர் ஏற்று செய்திருந்தார் என நான் கேட்க விரும்புகின்றேன். அத்தோடு ராணுவ உயர் அதிகாரிகளும் நாட்டின் அரசியல் தலைவர்களும் ஏன் தலைவர் பிரபாகரனை பாராட்டுகிறார்கள் எனவும் நான் கேட்க விரும்புகிறேன் என சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.