மத சுதந்திரம் அற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியாவை சேர்க்க அமெரிக்க அமைப்பு கோரிக்கை

இந்தியா தொடர்ந்து சிறுபான்மை சமூகங்களையும், அவர்களின் மத கலாச்சாரங்களையும் அவமதித்து வருவதாகவும், எனவே மத சுதந்திரமற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா சேர்க்கப்பட வேண்டும், இந்தியா மீது தடைகள் கொண்டுவரப்பட வேண்டும் என அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மத சுதந்திரத்திற்கான அனைத்துலக அமெரிக்கா அமைப்பு நேற்று (28) வெளியிட்டுள்ள ஆண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் மத சுதந்திரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. தலைநகர் புதுடில்லியில் அதிக வன்முறைகள் இந்து மதமற்றவர்களுக்கு எதிராக இடம்பெற்றுள்ளது.

இந்தியா இதனை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளை எடுக்காது விட்டால் அதன் மீது தடைகள் கொண்டுவரப்பட வேண்டும். 2019 ஆம் ஆண்டு இந்தியாவில் மிக மோசமான மத வன்முறைகள் பதிவாகியுள்ளன. சிறுபான்மை இன மக்கள் மதங்களை அடிப்படையாகக் கொண்டு தாக்கப்பட்டுள்ளனர்.

புதுடில்லியில் 53 முஸ்லீம்கள் கொல்லப்பட்ட போதும் அமெரிக்க அதிபர் தனது இந்திய பயணத்தின் போது அது தொடர்பில் பேசவில்லை. இது அவர்களுக்கு இடையிலான உறவாக இருக்கலாம் ஆனால் எமது அமைப்பு சுயாதீனமானது எனவே நாடுகளின் மத சுதந்திரத்தை மட்டுமே நாம் பார்ப்போம்.

வன்முறையில் ஈடுபடும் மதக் குழுக்களுக்கு நிதி உதவிகளை வழங்கும் அதிகாரிகளுக்கு எதிராக பயணத்தடைகள் கொண்டுவரப்பட வேண்டும் என அதன் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.