கிழக்கில்11 பாடசாலைகள் படையினர் வசம்

கிழக்கு மாகாணத்தில் 11 பாடசாலைகள், கொரோனா தனிமைப்படுத்தல் முகாம்களாகின்றன. கல்முனைப் பிராந்தியத்தில் 04 பாடசாலைகளும் திருமலைப் பிராந்தியத்தில் 04 பாடசாலைகளும் அம்பாறைப் பிராந்தியத்தில் 03 பாடசாலைகளும் படையினர்பொறுப்பேற்கப்பட்டுள்ளன.

இத்தகவலை, கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் ஊர்ஜிதம் செய்தார்.

கல்முனைப் பிராந்தியத்தில், கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலை, நாவிதன்வெளி வேப்பையடி கலைமகள் வித்தியாலயம், அக்கரைப்பற்று சென் ஜோன்ஸ் வித்தியாலயம், பாணமை தமிழ் மகா வித்தியாலயம் ஆகிய 04 பாடசாலைகள் தனிமைப்படுத்தல் முகாம்களாகின்றன.

திருகோணமலைப் பிராந்தியத்தில், மூதூர் இலங்கைத்துறை முகத்துவாரம் பாடசாலை, ரொட்டவேவ முஸ்லிம் வித்தியாலயம், மொறவேவ சிங்கள மகா வித்தியாலயம், புல்மோட்டை கனிஜாவலி சிங்கள மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் முகாம்களாக்க தெரிவுசெய்யப்பட்டுள்ளன.

அம்பாறைப் பிராந்தியத்தில், பொத்துவில் பாணமை மகா வித்தியாலயம், உகன ஹிமிதுறவ வித்தியாலயம், உகன கலகிட்டியாகொட மகா வித்தியாலயம் ஆகிய 03 பாடசாலைகளே தனிமைப்படுத்தல் முகாம்களாகின்றன.

மேற்படி 11 பாடசாலைகளையும் இராணுவத்தினர் பொறுப்பேற்று, தனிமைப்படுத்தல் முகாம்களாக மாற்றுவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துக்கொண்டிருப்பதாகத் தெரியவருகிறது.

கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுபவர்களை தனிமைப்படுத்திக் கண்காணிப்பதற்காக இப்பாடசாலைகள் பயன்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுன்றது.

இதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிர்ப்பும் கிளம்பி வருகிறது. வடக்கில் கோப்பாய் தேசிய ஆசிரியர் கல்லூரி, முல்லைத்தீவு முத்தையன் கட்டுப்பகுதியிலும் நேற்று எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டும் அவற்றை இராணுவம் கையேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.