கொரோனா அச்சம்: நூறு ஆண்டுகளில் முதன்முறையாக மூடப்படும் அமெரிக்க உச்ச நீதிமன்றம்

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமெரிக்க உச்ச நீதிமன்றம் நூறு ஆண்டுகளில் முதன்முறையாக மூடப்படுவதாக அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் 7ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஒரு இலட்சத்து 75ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் 1000இற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்க உச்ச நீதிமன்றம் 100 ஆண்டுகளில் முதன்முறையாக மூடப்படவுள்ளது. இது தொடர்பாக நீதிமன்ற அறிவிப்பில், “கோவிட் 19 காய்ச்சல் பரவி வருவதை அடுத்து வழக்கு விசாணைகளை நீதிமன்றம் தள்ளி வைக்கிறது. மார்ச் 23 முதல் ஏப்ரல் 1 வரை இது அமுலில் இருக்கும். பொது சுகாதாரம் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்படுகின்றது” என்று தெரிவித்துள்ளது.

1918இல் உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட “பானிஷ் ப்ளு காய்ச்சல் காரணமாக பொது சுகாதாரத்தைக் கருத்திற் கொண்டு உச்ச நீதிமன்றம் மூடப்பட்டது. அதைத் தொடர்ந்து 102 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது மூடப்படுகின்றது.

எனினும் வழக்கமான அலுவல்கள் வேலைகள் தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை அன்று வழக்கமாக நடைபெறும் நீதிபதிகள் ஆலோசனைக் கூட்டம் தொலைபேசி வழியாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் உள்ள 9 நீதிபதிகளின் சராசரி வயது 67 ஆகும். இதில் இரண்டு நீதிபதிகள் 80 வயதிற்கும் மேற்பட்டோராக உள்ளது குறிப்பிடத்தக்கது.