தனியார் கல்வி நிலையம் முற்றுகை;வழக்கும் பதிவுசெய்யப்பட்டது

மட்டக்களப்பு மாநகர சபையின் தீர்மானத்தினை மீறி வகுப்புகளை நடாத்திய மட்டக்களப்பின் பிரபல தனியார் கல்வி நிறுவனம் ஒன்றிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் உலகை ஆக்கிரமித்து வரும் நிலையில், கல்வி அமைச்சானது மாணவர்களைப் பாதுகாக்கும் நோக்கில் பாடாசாலைகளை மூடி இந்நோய்த் தொற்று ஏற்படாமால் தடுக்க மாணவர்களுக்கு விடுமுறையளித்துள்ளது.

இதற்கு மேலும் வலுச்சேர்க்கும் நோக்கோடும், மாநகருக்குள் வதியும் மாணவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையிலும் கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள் இயங்கும் அனைத்து தனியார் கல்வி நிலையங்களின் கல்வி நடவடிக்கைகள் யாவும் இடைநிறுத்தப்பட வேண்டும் எனும் தீர்மானத்தினை மாநகர சபையானது நிறைவேற்றியதுடன்ää அதற்குரிய அறிவிப்புகளும் விடுக்கப்படிருந்தன.

இந்நிலையில் மேற்படித் தீர்மானத்தினை மீறி மட்டக்களப்பு அரசடிப் பகுதியில் வகுப்புகளை நடாத்திகொண்டிருந்த பிரபல தனியார் கல்வி நிறுவனம் ஒன்றினை மட்டக்களப்பு பொலிஸார், சுகாதார சேவைகள் திணைக்கள அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள், மற்றும் மாநகரசபை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட குழுவினர் முற்றுகையிட்டதுடன் வழக்குத் தாக்கலும் செய்துள்ளனர்.

மாணவர்களுக்கு நோய்த் தொற்றினை பரப்பக்கூடிய வகையில் செயற்பட்டமை மற்றும் அரச சட்டதிட்டங்களை மீறி நடந்து கொண்டமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் உரிமையாளருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.