பொதுத்தேர்தலினை ஒத்திவைக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை!

நாட்டில் கொரோனா குறித்த அச்சம் அதிகரித்துள்ள நிலையில் மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரனினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘இவ் அறிக்கையானது தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சி தலைவர்களின் கலந்துரையாடலின் பின்னர் விடுக்கப்படுகின்றது.

நாட்டிலே தற்போது நிலவுகின்ற COVID 19 வைரஸ் பரவுகின்ற அபாயம் சம்பந்தமாக அரசாங்கம் தகுந்த உரிய நடவடிக்கைகள் அனைத்தையும் உடனடியாக எடுக்க வேண்டும்.

மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுக்கின்றது.

இவ்விடயத்தில் முற்றுமுழுதாக எமது பங்களிப்பினை வழங்குவதற்கு நாம் தயாராக உள்ளோம்.

மக்களுடைய பாதுகாப்பிற்கு அதியுச்ச கரிசனை வழங்கப்பட வேண்டும் என்பதாலும் இவ் அசாதாரண சூழ்நிலையில் ஜனநாயக நடவடிக்கைகளை முழுமையாக செயற்படுத்த முடியாத காரணத்தாலும் ஏப்ரல் 25ம் திகதி நடைபெற இருக்கின்ற பொதுத்தேர்தலை பிற்போடுமாறு நாம் கோரிக்கை விடுக்கின்றோம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.