யாழில் அதிர்ச்சி சம்பவம்!

காங்கேசன்துறையில் இருந்து, கொழும்பு நோக்கி பயணித்த இரவு தபால் புகையிரதத்தின் முன் படுத்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (06) மாலை 6.45 மணியளவில், ஸ்ரான்லி வீதிக்கும், பலாலி வீதி ஆரியகுளம் பகுதிக்குமான இடையில், யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு அண்மித்த புகையிரத கடவையில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் சங்கானை பகுதியைச் சேர்ந்த சுரேஸ் வயது (35) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

உயிரிழந்தவர் இலங்கை போக்குவரத்து சேவை (சி.ரி.பி) பஸ் நிலையத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றி வந்துள்ளார்.

கடந்த வாரம், மது போதையில் வேலைக்கு சென்ற போது, நிர்வாகத்தினரால் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும், கடந்த 05 ஆம் திகதியும் தற்கொலை செய்யப் போவதாக முயற்சித்த போது, நண்பர்கள் அவரை தடுத்து காப்பாற்றியதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், நேற்று மது போதையில் தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவ்வாறு ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக கிடைத்த தகவலின் பிரகாரம், ஊடகங்களில் வெளியிடப்பட்ட செய்தி அறிந்த உறவினர்கள், யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு வருகை தந்ததுடன், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கும் சென்றுள்ளனர்.

அதேவேளை, யாழ்ப்பாணம் பொலிஸார் யாழ்ப்பாணம் நீதவான் உத்தரவுடன், யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு வந்து விசாரணைகளை முன்னெடுத்ததுடன், யாழ் நீதிவான் சென்று சடலத்தைப் பார்வையிட்டதுடன், சடலத்தை யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.