ஏழுபேர் விடுதலை தொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்கும் அதிகாரம் எம்மிடம் இல்லை தமிழக அரசு

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக தண்டனை பெற்று வரும் 7 சிறைக் கைதிகள் விடுதலை தொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்கும் அதிகாரம் தமிழ்நாடு மாநில அரசிற்கு இல்லை என்று தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏழுபேர் விடுதலை குறித்து பரிந்துரை மட்டுமே செய்யப்பட்டுள்ளது என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிட்டது. அத்துடன் விடுதலை செய்வது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க மாநில அரசிற்கு அதிகாரமில்லை என்ற வாதத்தை தமிழக அரசு தரப்பில் முன்வைக்கப்பட்டது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிக்கும்படி, தமிழக அமைச்சரவை, 2018 செப்டெம்பர் 09ஆம் திகதி தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு பரிந்துரைத்தது. அந்த பரிந்துரை மீது ஆளுநர் இதுவரை எந்த முடிவும் எடுக்காததால், இதுவரை தன்னை விடுதலை செய்யாமல் சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளதால், தன்னை நிதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் எனக்கோரி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, மத்திய உள்துறை அமைச்சகத்தின் துணை செயலாளர் முகமது நஸிம் கான் சார்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஏழுபேர் விடுதலை முடிவை மத்திய அரசு ஏற்கனவே நிராகரித்திருந்ததால், பேரறிவாளன் கருணை மனு மீது சுதந்திரமாகவும், சட்டப்படியும் ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணையை பெப்ரவரி 12ஆம் திகதிக்கு ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, ஆர்.பொங்கியப்பன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராதாகிருஸ்ணன் தற்போது முன்கூட்டி விடுதலை செய்யக் கோரி மனுத்தாக்கல் செய்யவில்லை என்றும் 7பேரையும் விடுதலை செய்யத் தீர்மானம் நிறைவேற்றிய பின்னர் நியாயமற்ற முறையிலும், சட்டவிரோதமாகவும் சிறையில் அடைத்துள்ளதால் தங்கள் தரப்பில் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததுதான் என வாதிட்டார். மேலும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி அமைச்சரவையின் பரிந்துரைக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டுமென்றும், தீர்மானம் நிறைவேற்றிய பிறகு ஒவ்வொரு நாளும் சட்டவிரோதமாகவே நளினி சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக வாதிட்டார்.

இதையடுத்து தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை தொடர்ந்து மாநில அரசு நளினி உட்பட 7பேரின் விடுதலை தொடர்பாக 2018 செப்டெம்பரில் தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு பரிந்துரை அனுப்பியதென்றும், அமைச்சரவை பரிந்துரைத்தாலும் அது தொடர்பாக எந்த உத்தரவையும் அரசு பிறப்பிக்கவில்லை என தெரிவித்தார். மேலும் ஆளுநருக்கு அனுப்பிய தீர்மானம் என்பது பரிந்துரை மட்டுமே என்றும், எந்த உத்தரவையும் பிறப்பிக்க அரசிற்கு அதிகாரம் இல்லை என்றும் தெளிவுபடுத்தினார்.

இதனையடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் நளினி சட்டபுர்வ காவலில் இருக்கிறாரா அல்லது சட்டவிரோத காவலில் இருக்கிறாரா என்பது குறித்து தெளிவுபடுத்த அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞருக்கு உத்தவிட்ட நீதிபதிகள் விசாரணையை பெப்ரவரி 18ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.