பல்கலைக்கழக பகிடிவதை ; அதிகாரிகள் எடுத்துள்ள மூன்று முக்கிய தீர்மானங்கள்

யாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் மோசமாகப் பகிடிவதை இடம்பெறுகின்றமை மற்றும் தொலைபேசி மூலமான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டுக்களையடுத்து பல்கலைக்கழக மாணவர்களின் ஒழுக்கத்துடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழு முக்கிய தீர்மானங்களை எடுத்துள்ளது.

யாழ்.பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமி தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்திலேயே மூன்று முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

இதன்படி, மாணவர் நலச்சேவை உதவிப் பதிவாளர், மாணவர்கள் ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள், மாணவர் ஆலோசகர்கள், மூத்த மாணவர் ஆலோசகர்கள் அடங்கிய குழு அமைத்துச் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், மாணவிகளுக்குப் பாலியல் ரீதியான துன்புறுத்தல் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் குறுந்தகவல்கள், வட்ஸ் அப் தகவல்கள், தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய தரவுகளைப் பொலிஸாரின் இணையவழிக் குற்றங்கள் பிரிவு ஊடாக விசாரணை நடத்தல் மற்றும் மாணவர் ஒன்றியம் உடனடியாக புதுமுக மாணவர் வரவேற்பு நிகழ்வை நடத்த ஒழுங்கு செய்தல் ஆகிய 3 தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

யாழ்.பல்கலைக்கழகக் கிளிநொச்சி வளாகத்தில் பயிலும் மாணவி ஒருவர் பகிடிவதை காரணமாகத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி, உயர்கல்வி அமைச்சர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் மட்டத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டன. அந்த முறைப்பாடு தொடர்பாக யாழ். பல்கலைக் கழக நிர்வாகத்துக்குக் கடும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன.

இந்நிலையில் யாழ். பல்கலைக் கழக ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள், முறைப்பாட்டு அதிகாரி, பிரதி முறைப்பாட்டு அதிகாரிகள், மாணவ ஆலோசகர்கள், மூத்த மாணவ ஆலோசகர்கள், மாணவர் நலச் சேவைகள் உதவிப் பதிவாளர் உட்பட மாணவர் ஒழுக்கத்துடன் தொடர்புபட்ட அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கி நேற்று யாழ்ப்பாணத்திலுள்ள பிரதான வளாகத்தில் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தக் கூட்டம் நிறைவடைந்ததும் நண்பகல் 12 மணியளவில் கூட்டத்தில் அமைக்கப்பட்ட குழு, சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படும் கிளிநொச்சி வளாகத் துக்கு நேரில் சென்று விசாரணைகளை முன்னெடுக்கப் பயணமாகினர்.

இதேவேளை, யாழ். பல்கலைக் கழக நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பையும் ஊக்கங்களையும் வழங்குவதாக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, யாழ். பல்கலைக் கழகத்தில் இடம்பெறுவதாகக் கூறப்படும் பகிடிவதை குறித்து வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தனிப்பட்ட முறையில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார். அவர் எதிர்வரும் திங்கட்கிழமை யாழ். பல்கலைக்கழகத்துக்குச் சென்று இந்த விடயங்கள் தொடர்பாக நேரில் ஆராய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இது குறித்து ஆராய்வதற்கென உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் அதிகாரிகள் குழு ஒன்று எதிர்வரும் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு வருகை தரவுள்ளது என்றும் கூறப்பட்டது.