இலங்கையில் கடந்த ஆண்டில் பல உயர்மட்டக் குற்றவியல் விசாரணைகள், ஊழல் எதிர்ப்பு சீர்திருத்தங்கள் மற்றும் மனித உரிமைகள் முன்னெடுப்புகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், ஆழமான சட்ட மற்றும் நிறுவன ரீதியான சீர்திருத்தங்களுக்கான வேகம் மந்தமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் எச்சரித்துள்ளது.
மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் உரையாற்றிய மனித உரிமைகளுக்கான ஐ.நா. பிரதி உயர்ஸ்தானிகர் அவா டாபோ (Awa Dabo) மாற்றத்திற்கான ஆணையுடன் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் நேர்மறையான பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
குறிப்பாக, கிழக்குப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் படுகொலை தொடர்பான குற்றப்பத்திரிகைத் தாக்கல், முன்னாள் உளவுத்துறை பிரதானியின் கைது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் காவல்துறை மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோருக்கு வழங்கப்பட்ட தண்டனைகள் என்பன சுட்டிக்காட்டப்பட்டன.
அத்துடன், இனவாதம் மற்றும் மதவாத அரசியலுக்கு எதிரான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தொடர்ச்சியான கருத்துக்கள், 2025 ஆம் ஆண்டு நவம்பர் சூறாவளி மற்றும் உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு போன்ற சவால்களுக்கு மத்தியில் தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்க எடுக்கப்பட்ட முயற்சிகளையும் ஐ.நா. வரவேற்றுள்ளது.
இருப்பினும், பரந்த அளவிலான பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க முயற்சிகளில் முன்னேற்றம் வரம்பிற்குட்பட்டதாகவே உள்ளதாக ஐ.நா எச்சரித்துள்ளது.
ஆயுத மோதல் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றங்கள் தொடர்பாக எவ்வித அர்த்தமுள்ள முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்கள் மீதான அச்சறுத்தல்கள் தொடர்வதாகவும் அவா டாபோ சுட்டிக்காட்டினார்.
அத்துடன், சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து சுயாதீனமாக இயங்கும் ‘சுயாதீன வழக்கு தொடுநர்’ பொறிமுறையை நிறுவும் வாக்குறுதியை அரசாங்கம் நிறைவேற்றத் தவறியுள்ளதாகவும், காவல்துறை மற்றும் இராணுவக் கட்டமைப்புகளில் தீவிர மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுபவர்கள் தொடர்ந்தும் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அத்துடன், பயங்கரவாதத் தடை சட்டத்தை அரசாங்கம் தொடர்ந்து பயன்படுத்துவது குறித்தும், முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டமூலத்தில் அடங்கியுள்ள சில ஆபத்தான சரத்துக்கள் குறித்தும் ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
அதேநேரம், இலங்கையின் கடன் சுமை ஒரு முக்கிய மனித உரிமைப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாகக் குறிப்பிட்ட பிரதி உயர்ஸ்தானிகர், 2026 ஆம் ஆண்டு வரவு – செலவு திட்டத்தில் அரச வருவாயில் சுமார் 82 சதவீதம் கடன் வட்டி மற்றும் கடன் மீள் செலுத்தலுக்கே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இது சுகாதாரம், கல்வி மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்ட ஒட்டுமொத்தத் தொகையை விட இரண்டு மடங்கு அதிகம் என்பதால், இலங்கைக்கு மேலதிக அபிவிருத்தி உதவிகள் அவசரமாகத் தேவைப்படுவதாகவும் அவர் வலியுறுத்தினார்.



