திருகோணமலையில் கடும் வறட்சி: வறண்டு வரும் குளங்கள்!

திருகோணமலை மாவட்டத்திலும் தற்போது நிலவி வரும்– எல் நினோ தாக்கம் மற்றும் தொடர்ச்சியான மழையின்மை காரணமாக நிலவும் கடும் வரட்சியான காலநிலையால்  புளிஊத்து குளத்தின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து, குளம் தற்போது வறண்டு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

நீண்டகாலமாக போதிய மழைவீழ்ச்சி இல்லாத நிலையில், குளத்தின் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருவதால், இப்பகுதியை நம்பி விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

அத்துடன், குளத்து நீரை கால்நடைகளுக்காக பயன்படுத்தி வந்த கால்நடை வளர்ப்பாளர்களும் கடுமையான நீர்ப்பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளனர். குளம் முற்றாக வறண்டு போகும் நிலை ஏற்பட்டால், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு நடவடிக்கைகள் மேலும் பாதிக்கப்படும் அபாயம் காணப்படுகிறது.

எனவே, நிலவும் வரட்சியான காலநிலையை கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கும் கால்நடைகளுக்கும் தேவையான குடிநீர் மற்றும் நீர் வசதிகளை ஏற்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.