மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் சகல அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் தரப்புகளுடன் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பல ஆண்டுகாலமாக பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் R.M.A.L.ரத்நாயக்க தெரிவித்தார்.
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற விசேட செயற்குழுவில் முன்னிலையாகி பல யோசனைகளை முன்வைத்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் R.M.A.L.ரத்நாயக்க தெரிவித்தார்.
பழையத் தேர்தல் முறைமையின் கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்தலாம் என்று சட்ட மாஅதிபர் திணைக்களம் முன்வைத்துள்ள திருத்த பரிந்துரைகளுக்கு இணையான யோசனைகளை தாங்களும் முன்வைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
முன்வைக்கப்படும் யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை விரைவாக ஆராய்ந்து உறுதியான தீர்மானத்தை எடுக்குமாறு செயற்குழுவிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாணசபைகள் இயங்குவது ஜனநாயகத்துக்கு விரோதமான விடயமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாகாண சபைத் தேர்தல் குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடையாது.
ஏனெனில் 2017ஆம் ஆண்டு இயற்றப்பட்ட புதிய தேர்தல் முறைமையின் அம்சங்கள் பூர்த்திச் செய்யப்படாத காரணத்தால் எந்தத் தேர்தல் முறைமைக்கு அமைய மாகாண சபைத் தேர்தலை நடத்துவது என்பதில் சிக்கல் காணப்படுகிறது.
தேர்தல் முறைமை குறித்து பாராளுமன்றத்தின் ஊடாக உறுதியான தீர்மானம் ஒன்று எடுக்கப்பட வேண்டும்.
அப்போது தான் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் உத்தியோகபூர்வமாக தீர்மானங்களை எடுக்க முடியும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் R.M.A.L.ரத்நாயக்க தெரிவித்தார்.



