வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச தினத்தினை முன்னிட்டு, வடக்கு கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் யாழ்ப்பாணத்தில் “நீதிக்கான நீள் பயணம்” எனும் சர்வதேச மாநாடு நடத்தப்படவுள்ளது.
யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நாளை (30) காலை 09 மணிக்கு இந்த மாநாடு ஆரம்பமாகவுள்ளது.
மாநாட்டிற்கு முன்னதாக, உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலையானவர்களின் நினைவு தூபியில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்று, அங்கிருந்து பேரணியாக தந்தை செல்வா கலையரங்கிற்கு சென்று மாநாடு நடைபெறவுள்ளது.
மாநாட்டில், தூதரக பிரதிநிதிகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வடக்கு கிழக்கை சேர்ந்த உறவுகள், அரசியல் பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என பெரும் திரளானோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
அதேவேளை, மாநாட்டு மண்டபத்தில் ,வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பாவனை பொருட்கள், அவர்கள் விரும்பி சேகரித்த பொருட்கள், அவர்களின் நினைவாக இன்றும் உறவுகளிடம் உள்ள பொருட்கள் என்பவற்றை காட்சிப்படுத்தப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



