“பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் கணிசமான திருத்தங்கள் அவசியம்” – அலன் கீனன்

சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்புடையவாறு இச்சட்டம் இருக்கின்றது எனவும், ஆகையினால் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைப் பெறுவதற்கு அவசியமான நிபந்தனைகளை அது பூர்த்திசெய்கின்றது எனவும் கூறவேண்டுமாயின், பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் வரைவில் கணிசமான அளவு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கவேண்டும் என்று என சர்வதேச நெருக்கடி கண்காணிப்புக்குழுவின் ஆய்வாளர் அலன் கீனன் வலியுறுத்தியுள்ளார்.

பயங்கரவாதத்தடைச்சட்டத்துக்குப் பதிலாக அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை அவசியமான திருத்தங்களுடன் வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், அதனைத்தொடர்ந்து பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் கடந்த வாரம் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் தொடர்பில் சர்வதேச நெருக்கடி கண்காணிப்புக்குழுவின் ஆய்வாளர் அலன் கீனன் அவரது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கிறார்.

அப்பதிவில் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் மிகமோசமானது என்றும், இதனுடன் ஒப்பிடுகையில் பயங்கரவாதத்தடைச்சட்டம் தீவிரத்தன்மை குறைந்ததுபோல் தென்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை இப்புதிய வரைவு வர்த்தமானியில் வெளியிடப்படும்போது, அதில் அரசாங்கம் செய்திருக்கும் மாற்றங்கள் என்னவென்பதைப் பார்க்கமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்புடையவாறு இச்சட்டம் இருக்கின்றது எனவும், ஆகையினால் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைப் பெறுவதற்கு அவசியமான நிபந்தனைகளை அது பூர்த்திசெய்கின்றது எனவும் கூறவேண்டுமாயின், அச்சட்ட வரைவில் கணிசமான அளவு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.