நாட்டில் அண்மைகாலமாக சிறைச்சாலைகளில் இடம்பெறும் பதற்றமான சூழ்நிலைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, அது தொடர்பிலான அனைத்து நிறுவன பிரதானிகளையும் அழைத்து கலந்துரையாடுவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர்,சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா குறிப்பிடுகையில்,
நாட்டில் அண்மைகாலமாக சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்கள் மிகவும் கவலையளிக்கும் சம்பவங்களாகும். மனித உரிமைகள் ஆணைக்குழு என்ற ரீதியில் இது குறித்து நாங்கள் சிறப்பு கவனத்துடன் செயற்பட்டு வருகிறோம்.
ஏற்கனவே நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்து, அவை கணிசமான தூரம் முன்னெடுத்துச் செல்லப்பட்டுள்ளன. மஹர சிறைச்சாலை மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட ஏனைய சம்பவங்கள் குறித்தும் தற்போது ஆணைக்குழு விசாரணைகளை நடத்தி வருகின்றது.
தற்போது சிறைக்கைதிகளின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன. இந்த சிறைக்கைதிகளுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகளை பெற்றுக்கொடுக்குமாறு நாங்கள் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம். அதுமட்டுமன்றி, இரசாயன பகுப்பாய்வு அறிக்கைகள் வராததால் பிணை கிடைக்காமல் பெருமளவிலானோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வருட கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நடைமுறையை சரியாகச் சீரமைத்து, நாட்டின் அனைத்துச் சிறைச்சாலைகளிலும் இனிவருங்காலங்களில் இவ்வாறானதொரு நிலைமை ஏற்படாதவாறு அரசாங்கம் பார்த்துக்கொள்ள வேண்டும். புதிய மறுசீரமைப்புகளுக்கு சட்ட சிக்கல்கள் தடையாக காணப்பட்டால், புதிய சட்டங்களை இயற்றியாவது இதனைச் செய்யுமாறு அரசாங்கத்திடம் கோருகிறோம் என்றார்.



