இலங்கையில் உயர் நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை இரண்டு ஆண்டுகள் நீடிப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்தம் குறித்து சர்வதேச நீதிபதிகள் சங்கம் (IAJ) தனது பலத்த கவலையை வெளியிட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய சர்வதேச நீதிபதிகள் அமைப்பான சர்வதேச நீதிபதிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை மாற்றுவது பற்றிய கவலையை விட, இந்த சட்டமூலம் கொண்டுவரப்பட்ட விதம், நேரம் மற்றும் இதன் பின்னணியில் உள்ள நோக்கம் குறித்தே கவலை கொள்வதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
நீதித்துறையைப் பாதிக்கும் அரசியலமைப்பு மாற்றங்கள், முறையான ஆலோசனைகள் மற்றும் வெளிப்படையான வழிமுறைகள் மூலமே கொண்டுவரப்பட வேண்டும்.
தன்னிச்சையாக கொண்டு வரப்படும் இத்தகைய அறிவிப்புகள் நீதித்துறை சுயாதீனத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திருத்தச் சட்டம் குறிப்பிட்ட சில நீதிபதிகளுக்குப் பலன் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவே பரவலாகப் பார்க்கப்படுவதாகவும், இது நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் என்றும் சர்வதேச நீதிபதிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை நீதித்துறை சேவை சங்கம் மற்றும் பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் ஆகிய அமைப்புகளின் கவலைகளையும் தாம் பகிர்ந்துகொள்வதாகக் குறிப்பிட்டுள்ள சர்வதேச நீதிபதிகள் சங்கம், இந்தச் சட்டமூலத்தை தற்போதைய வடிவில் மீளாய்வு செய்யுமாறு இலங்கை அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.
1953-இல் ஆஸ்திரியாவில் தொடங்கப்பட்ட சர்வதேச நீதிபதிகள் சங்கம், 93 நாடுகளின் நீதிபதிகள் சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னணி சர்வதேச அமைப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.



