தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு இலங்கை அரசாங்கத்திடம் கனடாவின் டொரொண்டோவை தலைமையிடமாகக் கொண்ட நீதி மற்றும் சமத்துவத்திற்கான கனடியர்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
குறித்த அமைப்பின் பிரதிநிதியான ரோய் சமதானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் ஏற்பட்டுள்ள சிறைச்சாலை நெருக்கடி காரணமாக, மெகசின், போகம்பரை மற்றும் கொழும்பு விளக்கமறியல் உள்ளிட்ட சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
நாட்டின் சிறைச்சாலைகள் சுமார் 10,000 கைதிகளை மட்டுமே தங்க வைக்கும் வசதியைக் கொண்டிருந்தாலும், தற்போது சுமார் 40,000 பேர் சிறை வைக்கப்பட்டுள்ளதால் கடுமையான நெரிசல் நிலவுகிறது.
1983ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை மற்றும் 2000ஆம் ஆண்டு பிந்துனுவௌ படுகொலை போன்ற சம்பவங்கள் உட்பட சிறைச்சாலைகளில் வன்முறையான சூழல் உருவாகும் போதெல்லாம் தமிழ் அரசியல் கைதிகள் அதிக ஆபத்தை எதிர்கொள்கின்றனர்.



