வெறும் சீர்திருத்தங்களுக்கும் அப்பால் சென்று, இந்நாட்டின் சுகாதார சேவையை சர்வதேச மட்டத்தில் தரமான நிலைக்கு உயர்த்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும், அதற்குத் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சுக்கு 2026ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும், 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்தும் நேற்று (08) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
ஆரம்ப சுகாதார சேவையை வலுப்படுத்துவதற்காக “ஆரோக்கிய நல்வாழ்வு சேவை மையங்களை” அமைக்கும் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், ஆரம்ப சுகாதார சேவையை வலுப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் கீழ் உள்ள ஒவ்வொரு பிரிவினாலும் 2026 வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டங்களின் முன்னேற்றம் குறித்து இதன்போது தனித்தனியாக ஆராயப்பட்டதுடன், 2027ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுத் தேவைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இந்நாட்டின் சுகாதார சேவையின் தரத்தை மேம்படுத்துவதற்காக, விஞ்ஞான அடிப்படையிலான மூலோபாய முன்மொழிவுகளை விரைவாகச் சமர்ப்பிக்குமாறும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி இதன்போது அறிவுறுத்தினார்.
மேலும், வைத்தியசாலை கட்டமைப்பிற்குள் மேற்கொள்ளப்பட வேண்டிய புதிய தொழில்நுட்ப மாற்றம் குறித்தும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்ட வசதிகளை நாடளாவிய ரீதியில் உள்ள மக்கள் பெறக்கூடிய வகையில் நிறுவுவதன் மூலம், சுகாதார சேவையின் தரத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்த முடியும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இதன் மூலம், அரச வைத்தியசாலைக் கட்டமைப்பு மூலம் மக்கள் செயற்திறனான மற்றும் தரமான சுகாதார சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும், தனியார் துறையினரிடம் சுகாதார சேவைகளைப் பெறும்போது ஏற்படும் அதிக நிதிச் சுமையைக் குறைத்துக்கொள்ள முடியும் எனவும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.
சுவசெரிய சேவையை வலுப்படுத்துவதுடன், வைத்தியசாலைகளுக்கான அம்பியூலன்ஸ்களைப் பெற்றுக்கொள்ளும்போது, பாரம்பரிய வேன் ரக வாகனங்களுக்குப் பதிலாக, சர்வதேச தரத்திற்கு இணங்கக்கூடிய உயர் தொழில்நுட்ப உபகரணங்களைக் கொண்ட அம்பியூலன்ஸ்களை மாத்திரம் பெற்றுக்கொள்வது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
கடந்த அரசாங்கங்களினால் மூலதனச் செலவுகள் நிறுத்தப்பட்டதன் காரணமாக தடைப்பட்டிருந்த மொனராகலை மாவட்ட வைத்தியசாலையின் ஐந்து மாடிக் கட்டிடத் தொகுதி, திருகோணமலை, அம்பாறை, சிலாபம் ஆகிய வைத்தியசாலைகளின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுகள் உட்பட சுகாதாரத் துறையின் 26 பாரிய நிர்மாணத் திட்டங்கள் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதனுடன் சேர்த்து தற்போது 48 நிர்மாணத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவம் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
வைத்தியசாலைகளுக்குத் தேவையான மருந்துகளைத் தட்டுப்பாடின்றி வழங்குவதை உறுதி செய்வதற்காக, மருந்து கொள்வனவு தொடர்பில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தொழில்நுட்ப ரீதியான தீர்வுகளைக் கண்டறிவது குறித்தும், மருந்துகளின் தரத்தைப் பரிசோதிப்பதற்காக சுகாதார அமைச்சின் வசதிகளை விரிவுபடுத்துவதுடன், UNDP, UNICEF போன்ற அமைப்புகளின் ஆதரவுடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
சுகாதாரத் துறையை டிஜிட்டல் மயப்படுத்துவதன் கீழ், Patient Health App), Tele-medicine மற்றும் நோயாளிகளின் அறிக்கைகளை எந்தவொரு வைத்தியசாலையிலிருந்தும் பெற்றுக்கொள்ளக்கூடிய ஒருங்கிணைந்த வலையமைப்பை (National Electronic Health Record) நிறுவுவதன் முன்னேற்றம் குறித்து இங்கு மீளாய்வு செய்யப்பட்டது.
சுகாதார சேவையில் முறையான பணியாளர் மீளாய்வை மேற்கொள்வதற்கும், அதனை முன்னெடுக்கும்போது புதிய வைத்தியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது குறித்தும், சுகாதாரப் பணியாளர்களைப் புதிதாகப் பணியமர்த்துவது தொடர்பான பிரச்சினைகள் குறித்து நிதி அமைச்சுடன் கலந்துரையாடுவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.
அரச திரைப்படப் பிரிவிற்கு பௌதீக வளங்களை வழங்குதல், ஊடகவியலாளர் பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் பாடசாலை ஊடக சங்கங்களை உருவாக்கும் திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும் இங்கு ஆராயப்பட்டதுடன், அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் அரசாங்கத்துடன் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளக்கூடிய விசேட ஊடகச் செயல்பாட்டு அறையொன்றை (Media Operation Room) நிறுவுவதற்கான முன்மொழிவு குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், தற்போதுள்ள பழைய நடைமுறைகளிலிருந்து விடுபட்டு, தபால் திணைக்களம் மற்றும் அரசாங்க அச்சுத் திணைக்களம் ஆகியவற்றை நவீன தொழில்நுட்பத்துடன் புதுப்பிக்க வேண்டியதன் (update) அவசியத்தை ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.



