பிராந்தியத்தின் அமைதிக்கு உச்சபட்ச ஆதரவை வழங்க தயார் – ஜனாதிபதி

மத்திய கிழக்கின் நிலைமை அமைதியை நோக்கி நகரும் என நம்பிக்கை தெரிவித்த ஜனாதிபதி பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக இலங்கை தனது அதிகபட்ச ஆதரவை வழங்கத் தயாராக உள்ளது என்றும் அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் கலாநிதி போல் கபூரிடம் உறுதியளித்தார்.

இலங்கைக்கு வருகை தந்துள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் கலாநிதி போல் கபூர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

ஜனாதிபதி செயலகத்தில் திங்கட்கிழமை (22) பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இலங்கையின் ஏற்றுமதிப் பங்கில் தனி நாடாக மிகப் பெரிய பங்கை அமெரிக்கா கொண்டுள்ளதுடன், இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் இந்த வர்த்தக ஒத்துழைப்பை இருதரப்பிற்கும் பயனளிக்கும் வகையில் மேலும் வலுப்படுத்துவது குறித்தும், அதற்காக அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தப் பணிகளை எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக நிறைவு செய்வது குறித்தும் இச்சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டது.

மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலை நிலையான அமைதியை நோக்கி நகரும் என்று ஜனாதிபதி இதன்போது நம்பிக்கை வெளியிட்டார்.

இலங்கை பின்பற்றிய மனிதாபிமானக் கொள்கையை நினைவூட்டியதுடன், பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக இலங்கை தனது அதிகபட்ச ஆதரவை வழங்கத் தயாராக உள்ளது என்றும் ஜனாதிபதி உறுதியளித்தார்.