நீதிமன்ற உத்தரவால் மீள ஆரம்பிக்கப்பட்ட வவுனியா மாநகரசபையின் அமர்வு மீண்டும் ஒத்திவைப்பு

உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய, எட்டு மாதங்களுக்குப் பின்னர் இன்று (22) திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட வவுனியா மாநகரசபையின் முதலாவது அமர்வில் ஆளும் மற்றும் எதிர்த்தரப்பு உறுப்பினர்களுக்கிடையில் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் காரணமாகச் சபை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாநகரசபையின் சபை உறுப்பினர்கள் இருவர் தாக்கல் செய்த வழக்கின் அடிப்படையில், மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடுகளுக்குக் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது.

எனினும், குறித்த வழக்கு இன்னும் முடிவடையாத நிலையிலும், சபை மீது விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை நீக்கி உயர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது.

இதற்கமைய, எட்டு மாதங்களாக முடங்கியிருந்த சபையின் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டு, இன்றைய அமர்வு முதல்வர் காண்டீபன் தலைமையில் கூடியது.

அமர்வு ஆரம்பமானதும், முதல்வர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் நிலவுவதால் அவரது தலைமையில் கூட்டத்தை நடத்த அனுமதிக்க முடியாது என்று எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

முதல்வர் பதவி விலக வேண்டும் அல்லது பதில் முதல்வர் ஒருவரைத் தெரிவு செய்ய வேண்டும் எனக் கோரிய அவர்கள், மாநகரசபையின் அடிப்படை கட்டளைச் சட்டங்கள் மீறப்பட்டு பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினர்.

அத்துடன் இன்றைய கூட்டத்தை ஒரு குழுநிலை விவாதமாக மாற்றுமாறும் அவர்கள் வலியுறுத்தினர்.

எதிர்த்தரப்பின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த ஆளுந்தரப்பு உறுப்பினர்கள், முதல்வர் மீதான விசாரணை அறிக்கை இன்னும் சட்டரீதியாக வர்த்தமானியில் வெளியிடப்படவில்லை எனச் சுட்டிக்காட்டினர்.

முதல்வர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டிருந்தால் அவரது பதவியை ஆளுநர் இடைநிறுத்தியிருக்க முடியும் என்றும், அவ்வாறு எதுவும் நடக்காத பட்சத்தில் விசாரணை அறிக்கை வெளியாகும் வரை சபையைக் குழப்ப வேண்டாம் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இந்தநிலைியல், இரு தரப்பிற்குமிடையே ஏற்பட்ட இந்த அடுக்கடுக்கான மோதல்கள் மற்றும் கடுமையான வாக்குவாதங்கள் காரணமாகச் சபை நடவடிக்கைகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டன.