உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் : நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம் !

20260611 084203 உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் : நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம் !

உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என வலியுறுத்தி இன்று வியாழக்கிழமை (11) காலை நீர்கொழும்பு பால்தி சந்தியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததோடு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விசாரணைகளில் தலையிடாதே,  கட்டுவபிட்டிய தேவாலயத்தை  காட்டிக் கொடுத்தது யார்?, குற்றம்   செய்யாவிட்டால் பயம் ஏன்?, போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் நீர்கொழும்பு கட்டுவபிட்டிய  தேவாலயத்தில் இடம்பெற்ற போது  அங்கு கொல்லப்பவர்களுடைய குடும்ப அங்கத்தவர்கள் சிலரும் பிரதேசவாசிகள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இதில் கலந்துகொண்டனர்.

விசாரணைகள் இடையூறின்றி நடத்தப்பட வேண்டும், அரசியல் தலையீடுகள் கூடாது, விசாரணைகளுக்கு இடையூறு செய்பவர்கள்  கைது செய்யப்பட வேண்டும், அச்சுறுத்தலுக்கு அடிபணியக் கூடாது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முன்வைத்தனர்.

அமைதியான முறையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டம் காலை 8:30க்கு ஆரம்பமாகி  9.30க்கு  நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.