தனிப்பட்ட சம்பவத்தை இனவாதமாக்கும் முயற்சிக்கு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பு

யாழ். பல்கலைக்கழகத்தில் வெசாக் கூடுகள் சேதமாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து ஒட்டுமொத்தத் தமிழ் மாணவர் சமூகத்தின் மீதும் பொறுப்பைச் சுமத்த முயற்சிப்பதைத் தாம் கண்டிப்பதாகவும் குறித்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

யாழ். முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர் ஒன்றியம் அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ பீட வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வெசாக் கூடு சிலரால் சேதமாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எமது பீடத்தைச் சேர்ந்த சிங்கள மாணவர்களால் வெசாக் விளக்குகள் காட்சிப்படுத்தப்பட்ட இந்நிகழ்ச்சி, ஒன்றியத்தின் ஒப்புதல் மற்றும் ஆதரவுடன் நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியை எளிதாக்குவதிலும் அது வெற்றிகரமாக நடைபெறுவதை உறுதி செய்வதிலும் தமிழ் மாணவர்கள் தங்களின் ஒத்துழைப்பையும் உதவியையும் முனைப்புடன் வழங்கினர்.

மாணவர்கள் இந்த முக்கியமான சமய மற்றும் பண்பாட்டு விழாவைக் கொண்டாடுவதற்கு ஏற்ற சூழலை உருவாக்கச் சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டன.

துரதிர்ஷ்டவசமாக ஒரு சில நபர்களால் வெசாக் கூடு சேதப்படுத்தப்பட்டுள்ளது, இந்த நாசவேலையை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் இதற்கு நேரடியாகப் பொறுப்பானவர்கள் அடையாளம் காணப்பட்டு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனக் கோருவதாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

சில தனிநபர்கள் இந்தச் சம்பவத்தைப் பொதுமைப்படுத்தி ஒட்டுமொத்தத் தமிழ் மாணவர் சமூகத்தின் மீதும் பொறுப்பைச் சுமத்த முயற்சிப்பதை கண்டிப்பதுடன் தங்களது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இத்தகைய குற்றச்சாட்டுகள் நியாயமற்றவை, தவறாக வழிநடத்துபவை, குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

“அதேசமயம், இந்தத் தனிப்பட்ட சம்பவத்தை ஒரு இனப் பிரச்சினையாக மாற்றும் எந்தவொரு முயற்சியையும் நாங்கள் நிராகரிக்கிறோம்” என்று யாழ். முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

“ஒரு சில தனிநபர்களின் செயல்களைச் சமூகங்களுக்கு இடையே பிளவுகளை உருவாக்கவோ அல்லது நமது பீட மாணவர்களிடையே நிலவும் ஒற்றுமையையும் பரஸ்பர மரியாதையையும் சீர்குலைக்கவோ பயன்படுத்தக் கூடாது.

அனைத்து மாணவர்களும் பொறுப்புடன் செயல்படுமாறும், தவறான தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நியாயமான விசாரணை நடத்த அனுமதிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்” என்றும் யாழ். முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த வெசாக்கூடு சேதமாக்கப்பட்டமைக்கு பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

யாழ். முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையை வரவேற்று கருத்துரைத்துள்ள அவர், சகல மதங்களினதும் பண்பாட்டு மற்றும் சமய உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.