மாகாண சபைத் தேர்தலை நடக்குமா? தேர்தல் ஆணைக்குழு கருத்து

பாராளுமன்ற விசேட குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றித் தரப்படும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தயாராக இருப்பதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தற்போது நிலவும் சட்ட ரீதியான தடைகள் மற்றும் அந்தத் தடைகளை நீக்கி மாகாண சபைத் தேர்தலை நடத்தக்கூடிய விதம் குறித்து சட்ட மா அதிபர் திணைக்களம் விசேட குழுவிற்குத் தெளிவுபடுத்தியுள்ளது.

மாகாண சபைத் தேர்தல் எந்த தேர்தல் முறையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கும், அது தொடர்பான தனது யோசனைகளையும் பரிந்துரைகளையும் முன்வைப்பதற்கும் நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட குழு, சட்ட மா அதிபர் திணைக்களம் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களிடம் விடயங்களை வினவியிருந்தது.

குறித்த விசேட குழு, அதன் தலைவரான அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த வினவல் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போதே தேர்தல் ஆணைக்குழுவினால் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் பிரதி அமைச்சர்களான அருண் ஹேமச்சந்திர, சட்டத்தரணி சுனில் வடகல, முனீர் முலாபர் ஆகியோரும், குழுவின் உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர்கள் மனோ கணேசன், இராசமாணிக்கம் சாணக்கியன் , தர்மப்பிரிய விஜேசிங்க, சமன்மலி குணசிங்க, லக்ஷ்மன் நிபுணஆரச்சி ஆகியோரும் கலந்துகொண்டதுடன், ஜனாதிபதி சட்டத்தரணி எம். நிஸாம் காரியப்பர் இணையவழியாகவும் கலந்துகொண்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.