இலங்கையின் சுகாதாரத் துறைக்கு உலக சுகாதார ஸ்தாபணம் பாராட்டு

தாயிடமிருந்து சேய்க்கு பரவும் எச்.ஐ.வி மற்றும் சிபிலிஸ் ஆகிய பால்வினை நோய்கள் பரவுவதைத் தடுத்து, அதனை கட்டுப்படுத்தி, தொடர்ச்சியாகப் பேணி வந்தமைக்காக இலங்கைக்கு உலக சுகாதார ஸ்தாபணம் விசேட பாராட்டுச் சான்றிதழை வழங்கி செவ்வாய்க்கிழமை (19) கௌரவித்தது.

சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் தற்போது நடைபெற்று வரும் உலக சுகாதார ஸ்தாபணத்தின் 79 ஆவது உலக சுகாதார மாநாட்டின் போதே இச்சான்றிதழ் இலங்கையிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது. உலக சுகாதார ஸ்தாபணித்தின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயசஸ் இதற்கான விசேட மதிப்பீட்டுச் சான்றிதழை சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் நேரடியாக வழங்கி வைத்தார்.

உலக சுகாதார அமைப்பினால் அறிமுகப்படுத்தப்பட்ட தரநிலைகள் மற்றும் உலகளாவிய ஆலோசனைக் குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய, இலங்கையின் சுகாதாரத் துறை அடைந்துள்ள இந்தத் தொடர்ச்சியான முற்போக்கான முன்னேற்றத்தை சர்வதேச ரீதியில் பாராட்டும் முகமாகவே இவ்விசேட கௌரவம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.