அரசாங்க வைத்தியசாலைகளுக்கான தேசிய ஒட்சிசன் பயன்பாட்டு வழிகாட்டல் கோவை அறிமுகம்!

சுகாதார அமைச்சினால் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் ஒத்துழைப்புடன், அரசாங்க வைத்தியசாலைகளில் ஒட்சிசன் பயன்பாடு குறித்த முதலாவது தேசிய வழிகாட்டல் கோவை சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் அண்மையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

வைத்தியசாலைகளில் ஒட்சிசன் பயன்பாட்டைத் தரப்படுத்துவதையும், சுகாதார பணியாளர்களிடையே தொழில்நுட்ப அறிவை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இச்செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

முதற்கட்டமாக 100 விசேட வைத்தியர்கள் உட்பட சுகாதார நிபுணர்களுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது. இவர்கள் ஊடாக மாவட்ட மற்றும் மாகாண மட்டத்திலுள்ள ஏனைய ஊழியர்களுக்குப் பயிற்சிகள் விரிவுபடுத்தப்படும்.

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் குமார விக்கிரமசிங்க தலைமையில் இந்த வழிகாட்டல் கோவை தொகுக்கப்பட்டுள்ளன. ஒட்சிசன்  கொள்வனவுக்காக அரசாங்கம் ஆண்டுதோறும் பெருமளவு நிதியைச் செலவிடுகிறது. செலவைக் குறைக்கவும் தரத்தை அதிகரிக்கவும் ஏற்கனவே பல வைத்தியசாலைகளில் ஒட்சிசன் உற்பத்தி அலகுகள் நிறுவப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

திஸ்ஸமஹாராம ஆதார வைத்தியசாலை, அவிசாவளை மாவட்ட பொது வைத்தியசாலை, உடுகம ஆதார வைத்தியசாலை, கேகாலை மாவட்ட பொது வைத்தியசாலை ஆகியவற்றில்  இந்த அலகுகள் அந்தந்தப் பிரதேசங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன், மேலதிக ஒட்சிசனை ஏனைய வைத்தியசாலைகளுக்கும் விநியோகித்து வருகின்றன.

இந்நிகழ்வில் யுனிசெப் இலங்கைக்கான பிரதிநிதி எம்மா ஆப்ரகாம் , அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், வைத்தியசாலைப் பணிப்பாளர்கள் மற்றும் விசேட வைத்தியர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.