இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு புதிய கட்டணத் திருத்தங்களையும் அறிவித்துள்ளன.
அதற்கமைய, இலங்கை மின்சார கட்டணங்கள் சுமார் 10 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளன.
முன்னதாக இலங்கை மின்சார சபை சுமார் 13 சதவீத மின்கட்டண அதிகரிப்பை கோரியிருந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் துறைசார் நிபுணர்களின் கருத்துகள் மற்றும் ஆலோசனை அடிப்படை புதிய கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நிலவும் எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்கும் பொருட்டு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தினால் புதிய வழிகாட்டல்களும் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, அனைத்து அரச மற்றும் சட்டரீதியான நிறுவனங்களிலும் உள்ள குளிரூட்டிகள் (Air Conditioners) மாலை 3 மணிக்குப் பின்னர் அணைக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேபோன்ற மின்சாரச் சேமிப்பு நடவடிக்கைகளைத் தங்களது நிறுவனங்களிலும் பின்பற்றுமாறு தனியார் துறையினருக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மின்சார நுகர்வைக் குறைக்கும் நோக்கில், ஒளிரும் விளம்பரப் பலகைகள் மற்றும் திரைகளை இரவு 8 மணிக்குப் பின்னர் அணைத்து வைக்க வேண்டும் எனவும் வீதி விளக்குகளை இரவு 6 மணி முதல் 10 மணி வரை அணைத்து வைப்பதற்கான திட்டங்களை முன்னெடுக்குமாறு உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் பெரிய அளவிலான விழாக்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்குத் தேசிய மின் கட்டமைப்பிலிருந்து (National Grid) மின்சாரத்தைப் பெறுவது தவிர்க்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



