அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள கிவுல் ஓயா திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி பருத்தித்துறை பிரதேச சபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் நில ஆக்கிரமிப்பு மற்றும் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் நோக்குடன் இத்திட்டம் கொண்டுவரப்படுவதாகக் குறிப்பிட்டு, சபை உறுப்பினர் குறிஞ்சி குமரனால் நேற்று (20) இந்தப் பிரேரணை முன்வைக்கப்பட்டது.
தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் தலைமையில் நடைபெற்ற இந்தச் சபை அமர்வின் போது, குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 16 உறுப்பினர்களும், எதிராக 4 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
இதனடிப்படையில் 12 மேலதிக வாக்குகளால் இந்த தீர்மானம் வெற்றிபெற்றது. எனினும், இந்தப் பிரேரணை பிரதேச சபையுடன் தொடர்புடைய விடயம் அல்ல எனக் கூறி தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் நால்வரும் இதற்குத் தமது எதிர்ப்பினைப் பதிவு செய்திருந்தனர்.
இதேவேளை, சபை உத்தியோகத்தர்களுடன் உறுப்பினர்கள் நேரடியாகப் பேசுவதைத் தவிர்த்து, சபை சார்ந்த விடயங்களைத் தவிசாளரிடமும் ஆலோசனைகளைச் செயலாளரிடமும் பெற்றுக்கொள்ள வேண்டும் எனத் தவிசாளர் இதன்போது அறிவுறுத்தினார்.
மேலும், சபையின் நிதி அனுமதிகள், மக்கள் முறைப்பாடுகள் மீதான நடவடிக்கைகள் மற்றும் வீதி அபிவிருத்தி, மின் விளக்குகள் பொருத்துதல் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்களுக்கும் இந்த அமர்வில் அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



