அமெரிக்காவிடமிருந்து இலங்கைக்கு 10 போர் உலங்குவானூர்தி அன்பளிப்பு

அமெரிக்காவினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட 10 TH-57 Sea Ranger ரக உலங்குவானூர்திகள் தற்போது இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் மஹிந்த சமரசிங்க உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த 10 உலங்குவானூர்திகளும் கடந்த மார்ச் 15ஆம் திகதி அமெரிக்காவின் அலபாமா மாகாணத்திலுள்ள போர்ட் மொபைல் துறைமுகத்திலிருந்து இலங்கையை நோக்கிப் புறப்பட்டு எதிர்வரும் மே மாதம் 24ஆம் திகதி இலங்கையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Bell 206B-3 Jet Ranger ரகத்தின் இராணுவப் பதிப்பான இந்த உலங்குவானூர்திகள், இலங்கை விமானப்படையிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

ஏற்கனவே இலங்கை விமானப்படையிடம் உள்ள Bell 206 ரக விமானங்களுடன் இந்த புதிய ஹெலிகொப்டர்களும் இணையவுள்ளன. இதன் மூலம் விமானிகளுக்கான உயர்தரப் பயிற்சி.பேரிடர் கால மீட்பு நடவடிக்கைகள். தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் ஏனைய பாதுகாப்பு மற்றும் பொதுப் பயன்பாட்டுத் திறன்கள் அதிகரிக்கப்படும்.

இந்த ஹெலிகொப்டர்கள் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள தூதுவர் மஹிந்த சமரசிங்க, இந்த அன்பளிப்பானது அமெரிக்கா மற்றும் இலங்கை இடையிலான நீண்டகாலக் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் இலங்கை விமானப்படையின் உயர்மட்டக் குழுவொன்று அமெரிக்காவிற்குச் சென்று இந்த உலங்குவானூர்திகளைப் பார்வையிட்டிருந்தது. இந்த பெறுமதிமிக்க உதவிக்காக இலங்கை அரசு அமெரிக்காவிற்குத் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தூதுவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.